வியாழன், 5 டிசம்பர், 2013

ஃபிரான்சிஸ் இந்து (Francis - Indhu)

11-Oct-2013
வீதி வரை மின்னலாய் வந்த பைக் பள்ளி வளாகத்தில் நுழைந்ததும் வேகம் குறைந்தது. நகரத்திற்கும் கிராமத்திற்கும் நடுவிலான ஒரு சிறிய ஊர் அது. ஐந்தாறு தொடக்க பள்ளிகள் மொத்தமாய் இருந்தாலும், அதில் இது மிகவும் பழமையானது. கட்டிடம் கூட ரொம்ப வருடமாய் அப்படியே தான் இருக்கிறது. 'ப' வடிவில் இரண்டு வரிசையாய் வகுப்பறைகள். நடுவில் திறந்த மைதானம். பைக்கை ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு, அதில் அமர்ந்திருந்த காக்கி யூனிபார்ம், அநாயசமாய் கால்களை தூக்கி, விறைப்பாய் இறங்கியது. முகத்தில் சரியாய் ட்ரிம் செய்த மீசை, ஒரு நாள் வயதான தாடி மயிர்கள், திமிரான பார்வை, சட்டையை கிழித்து கொண்டிருந்த மார்பு மற்றும் கை தசைகள், முக்கியமாய் தொப்பை இல்லை. தனக்கு மிகவும் பழக்கமான இடம் போல் உள்ளே நடக்க தொடங்கினான். எதிர் வந்த பியூன் வயதில் முதியவராய் இருந்தாலும், தலை தாழ்த்தி 'வணக்கம் சார்' என்றார். 'அத்த ரூம் ல இருக்காங்களா?', கம்பீரமாய் கேட்டான். ' இருக்காங்க சார்', பணிவாய் பதில் வந்தது. உள் வரிசை அறைகளில் ஓரமாய் இருந்த ஹச்.எம். (H.M) அறை நோக்கி நடந்தான். அறை என்றால் சுவரால் தடுக்க பட்டது அல்ல, ஒரு பழைய கார்ட் போர்ட் வைத்து அடைக்க பட்ட அறை. கதவென்ற பெயரில் இருந்த தகரத்தை லேசாக தட்டி விட்டு, 'அத்த' என்றான். தலை நிமிர்ந்த ஹச்.எம் மிற்கு 50 வயது தாண்டி இருக்கும், தலை நரைக்காவிட்டாலும் முகத்தில் அனுபவ கோடுகள், இன்று கொஞ்சம் கவலை ரேகைகள் சேர்ந்து கொண்டது போல் இருந்தது.


'வாய்யா சௌந்தரு', பதட்டத்தில் இருப்பது போல் இருந்தாலும், குரலில் கொஞ்சம் பாசம் தெரிந்தது.
'உக்காருப்பா'

'மன்னிச்சிடுங்க அத்த, நீங்க போன் பண்ண போது கலெக்டர் மீட்டிங் ல இருந்தேன். எடுக்க முடியல. 5 மிஸ்டு கால் இருந்தது. ஏதோ அவசரம் போலன்னுட்டு மீட்டிங் முடிஞ்சதும் இங்க வந்துட்டேன். எதுவும் பிரச்சனையா அத்த, அந்த கடக்காரென் ஏதாவது மறுபடியும் கலாட்டா பண்ணானா?'

'அதெல்லாம் ஒன்னு இல்லையா, வேற விஷயம். பிரச்சனையான்னு தெரியல, அதான் உன்ன கூப்டேன்.'

'புரியல அத்த'

ஹச்.எம் சற்று குரலை தாழ்த்தி, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தொடங்கினார், 'நம்ம இந்து டீச்சர் இருக்காங்கள்ள.. '

'ஆமா, அந்த வடக்கு கோனார் தெருக் காரங்க தான?'

'ஆமாய்யா, அவுங்கதான். நாலு நாளா ஸ்கூல் க்கு வரல. ஒரு போன், லெட்டெர் எதுவும் இல்ல'

'யாரையாவது வீட்டுக்கு அனுப்ச்சு பாத்தீங்களா?'

'ஆமா, நம்ம கோமாரிய போய் பாக்க சொன்னேன். வீட்டு பக்கம் 2,3 நாளா ஆள காணோமாம்'

'அவுங்க புருஷன் இருக்காப்லயா?

'ஒனக்கு ஞாபகம் இல்லையா, அவன் சரியான தண்ணி வண்டி. எந்நேரமும் போத தான், அக்கம் பக்கத்து வீட்டுக் காரவுங்க தான் சொல்லி இருக்காங்க'.

'ஊருக்கு எதுவும் அவசரமா  போய்  இருப்பாங்க அத்த,'

'நானும் அப்டித்தான் நெனச்சேன், ஆனா, காலைல அவுங்க அப்பா ஸ்கூல் க்கு போன் பண்ணாரு, வீட்டு நம்பர் கிடைக்காம இங்க கால் பண்ணி இருந்தாரு. நான் அவர பயமுடுத்த வேண்டாமேன்னு, ஒரு ஸ்கூல் விஷயமா பக்கத்து ஊர் போய் இருக்காங்கன்னு சொல்லி வச்சேன்'

'ஒ, ஏதோ பிரச்சன மாதிரி தான் தெரியுது அத்த, சரி, கம்ப்ளைன்ட் எதுவும் பண்றீங்களா?'

'இல்லையா, அது ரொம்ப தங்கமான புள்ள.. பொம்பள புள்ள சமாச்சாரம், என்னன்னு தெரியாம பெருசு பண்ண வேண்டாம். நீ கொஞ்சம் அந்த பொண்ணு பத்தரமா இருக்கான்னு விசாரிச்சு பாருய்யா'

'புரியுது அத்த, நான் இப்பவே விசாரிச்சு பாக்குறேன் '

'சரிய்யா, இன்னொன்னு..' என்று இழுத்தார்.

'சொல்லுங்க அத்த,'

'இது என்னன்னு தெரியலையா, தப்பா எதுவும் இருக்க கூடாதுன்னு சாமிய வேண்டிக்கிறேன்', சற்று குரலை தாழ்த்தி, 'நம்ம ஸ்கூல் ல டெம்பரவரி ஸ்டாஃப் ஒரு டீச்சர் மூணு மாசமா இருக்காரு, அவரையும் நாலு நாளா காணல'

'ஒ.., அவரு வீட்ல போய் பாத்தீங்களா?'

'அவரு பக்கத்து டவுன் ல இருந்து வந்துட்டு இருந்தாரு, இன்னும் போய் பாக்கல, நான் அட்ரஸ் தரட்டுமாய்யா ?'

'குடுங்க அத்த, ரெண்டு பேரு ஒரே நேரத்துல காணோம் னு சொல்றீங்க, ஏதோ வெவகாரமா தெரியுது.'

'எதுவும் வெவகாரம் இருக்க கூடாதுய்யா, ரெண்டு பேரும் ரொம்ப நல்ல ஆளுங்க'

'சரி அத்த, நான் விசாரிச்சிட்டு சொல்றேன், அந்த இன்னொரு டீச்சர் பேரு என்ன?'

'பிரான்சிஸ்

                                             ______________________________
6-Oct-2010 (மூன்று வருடம் முன்னர்)

'இந்து,நல்லா யோசிச்சுதான் பேசுறியா?' கண்களில் நிரம்பிய நீர் வழிந்தோட தயாராய் இருந்தது.

'என்னால இதுக்கு மேல யோசிக்க முடியல பிரான்சிஸ்', அவளது விழிகளும் கண்ணீர் மொழியில் பேச தயாராயிருந்தது..

'என்ன பிரிஞ்சு உன்னால இருக்க முடியுமா இந்து?'

'தெரியாது பிரான்சிஸ், ஆனா, எங்கப்பாவ கொன்னுட்டு உங்கூட சந்தோசமா இருக்க முடியாதுன்னு கண்டிப்பா தெரியும்'

'உங்கப்பா மனசு மாறுற வரைக்கும் நான் காத்திருக்கேன்னு தான் சொல்றேனே! ', அவன் குரலில் இயலாமை நிறைந்திருந்தது..

'ஒனக்கு புரியலையா பிரான்சிஸ், இது நடக்காது!!', அவள் பிரசவிக்க மறுக்கும் வார்த்தைகளை, இதழ்கள் வெடிக்க, இதயம் கனக்க, வெளியே தள்ளி கொண்டிருந்தாள்... வார்த்தைகளின் வலியை கண்ணீர் கொண்டு கரைக்க முயற்சி செய்து கொண்டிருந்தன விழிகள் .

'நீ இல்லாட்டி நா செத்துடுவேன் இந்து '

'நீயும் எங்கப்பா மாதிரியே மெரட்டுரியே டா , முழுசா உயிர விடுற உரிம கூட இல்லாம கொஞ்சம் கொஞ்சமா நான் செத்துட்டு தான் இருக்கேன், அது உனக்கு தெரியலையா?! '

'எனக்கு தல வெடிக்குது இந்து, உன்ன நான் எப்டி மறக்க முடியும்'

'என்ன மறக்க சொல்ற அளவுக்கு நா கொடும காரி கெடயாது, என்னாலயும் உன்ன மறக்க முடியாது,, ஆனா நாம சேந்து வாழ இந்த உலகத்துல எடம் இல்ல டா '

'இருந்தாலும் செத்தாலும் ஒன்னா தான் இருப்போம்னு, நீதான இந்து சொன்ன', குழந்தை போல் அழுகை பீறிட்டு வந்தது..

அவளால் நீர் பிரவாகத்தை தடுக்க முடிய வில்லை, எதோ சொல்ல நினைத்தாள், ஆனால்  மொழியின் உதவி அற்றுப் போனது. அவள் மெல்ல குனிந்து அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள். அவள் கண்ணீரின் வெப்பம் அவன் தலை மயிரை கோதியது, வெடித்து அழ காத்திருந்த அவனது இதழ்களில் தனது இதழ் பதித்தாள்.  எத்தனையோ நாட்களில் காதலிலும், காமத்திலும் கூட தள்ளிப் போட்ட முத்தம், இன்று குளிர் வாடையில் நெருப்பு துண்டாய் அவன் அழுகைக்கு இதம் தந்தது. காமம் கொஞ்சம் கூட கலக்காத உயிர் முத்தம் அது. அனிச்சையாய் அவன் கைகள் அவள் கைகளோடு கோர்க்க, நிலை உணர்ந்தவளாய் அவன் கைகளை விலக்கி பின்னே நடந்தாள்.

'நான் வரேன் பிரான்சிஸ்', ஒலிக்கு உதவாமல் உதடுகள் அசைந்தன..

'மனச தொட்டு சொல்லு இந்து, என்ன விட்டு போக உன்னால முடியமா?' அவன் மனதுக்குள் முணுமுணுத்தது அவள் காதுகள் அறியாவிட்டாலும், காதல் அறிந்தது.  பதில் ஏதும் இல்லாமல் தொலை தூர மேகமாய் மறைந்து போனாள்.

                                     ___________________________________
11-Oct-2013

ஒரு குடம் தண்ணீர் ஊற்றியும் அவன் எந்த சலனமும் இல்லாமல் போதையில் கிடந்தான். சௌந்தர் எரிச்சலாய் 'இவென் எப்பவும் இப்டிதானா?' என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டான்.

'ஆமா சார், பகல் குடிகார பய சார்'

'ம்ம்..எத்தன வருஷமா இவுங்கள தெரியும்?'

'அது இருக்கும் சார் மூணு வருஷம். கல்யாணம் ஆனதுல இருந்து இங்க தான் இருக்காங்க, அந்த பொண்ணு இந்துவோட அப்பா வாங்கி குடுத்த வீடு சார் இது, இந்து தங்கமான பொண்ணு, இவந்தான் காலிப் பய'

'ம்ம்..எங்க, அந்த டீச்சர் இப்போ?'

'தெரியல சார், ஊர்க்கு போனா கூட எங்க வீட்ல சொல்லிட்டு தான் போகும். ரெண்டு மூணு நாளா காணோம், என்னான்னு தெரியல, இந்த பய தொல்ல தாங்க முடியாம எங்கயும் போய்டுச்சோன்னு பயமா இருக்கு சார். இல்ல இவென் எதுவும் எழவு பண்ணிட்டானான்னு வேற கவலயா இருக்கு '

'சரி, நீங்க போங்க, இவன நான் பாத்துக்குறேன். எதுவும் வேணும்னா கூப்ட்டு விடறேன்'

'சரிங்க சார்', அதற்க்கு மேல் அங்கு இருக்க முடியாதென அறிந்து, குழப்பமாக வெளியே போனார் பக்கத்துக்கு வீட்டுக்காரர்.

குடி போதையில் இருக்கும் இவனால் எதுவும் பிரோஜனம் இல்லை என்று புரிந்தது. அவன் மேல் சந்தேகம் படும் படியும் எதுவும் தெரியவில்லை, மெல்ல தட்டினால் சுருண்டு விழுந்து விடுவான். வீட்டை முழுசுமாய் அலசுவதென்று முடிவு செய்து, ஒவ்வொரு அறையாய் நுழைந்தான். கொஞ்ச நேரத்தில் எதுவும் கிடைக்காமல் சலிப்பாய் திரும்பிய போது, ஓரத்தில் ஒரு இரும்பு பீரோ இருந்தது. யோசிக்காமல் அதனை திறந்தான், அதுவும் எந்த எதிர்ப்பும் இன்றி திறந்து கொண்டது. உள்ளே, பெருசாய் எதுவும் இல்லை. கீழ் வரிசையில் பழைய சேலைகள், நைட்டிகள், உள்ளாடைகள். நடு வரிசையில், சில நல்ல சேலைகள். அதை அகற்றி பார்த்தான், சில ரசீது காகிதங்கள். எல்லாவற்றையும் நகர்த்தி உள்ளே பார்த்த போது, மஞ்சள் நிறமாய் மாறி இருந்த ஒரு பேப்பர். அதை மெல்ல எடுத்தான், கொஞ்சம் நைந்த நிலையில் இருந்த பேப்பரை, பக்குவமாய் திறந்து பார்த்தான். கீழே கையொப்பம் கண்ணை கவர்ந்தது. 'காதலுடன், உன் பிரான்சிஸ்' பக்கத்தில் ஒரு ஹார்ட்-இன் தொங்கிக் கொண்டிருந்தது. சட்டென திரும்பி, பைக் நோக்கி நகர்ந்தான்.  பைக் பிரான்சிஸ் வீடு தேடிப் பறந்தது.
                                         ________________________________________
8-Jul-2013(3 மாதம் முன்னால்)

இந்து வழக்கம் போல் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். மதிய சாப்பாட்டை டிபன் பாக்ஸ்ஸில் போட்டு அடைத்துக் கொண்டாள். காலை உணவு, தினமும் சாப்பிடும் பழக்கம் மறந்து சில வருடங்கள் ஆகி விட்டன. இன்று லேசாய் பசிப்பது போல் இருந்தது. சட்டியில் மீதமிருந்த லெமன் ரைஸ் கொஞ்சம் எடுத்து தட்டில் போட்டு ஒரு வாய் எடுத்து வைக்கும் போது 'உவ்வேஏ' என்று கேவலமான சத்தத்துடன் அவள் புருஷன் வாந்தி எடுத்தான்.. திருமணமாகி இவள் வாந்தி எடுத்தாளோ இல்லையோ, அவன் தினமும் எடுத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பாத் ரூமில் எடுப்பான், சுத்தம் செய்வது எளிதாய் போகும். பல நாட்களில் அவள் அதிர்ஷ்டம் இல்லாதவளாகவே இருந்தாள். சத்தத்தில் கூட நாற்றம் இருப்பது பலருக்கு புரியாது. தட்டில் இருந்த சோறு அருவருப்பாய் பட்டது. அப்படியே குப்பையில் போட்டுவிட்டு நகர்ந்தாள்.

கண்ணாடியை கடந்த போது, நெற்றி வெற்றாய் இருந்தது தெரிந்தது. வேகமாய் பைக்குள் இருந்து நீள பொட்டை எடுத்து வைத்துக் கொண்டாள். அந்த நீள பொட்டை ரசிக்க சில வருடம் முன்பு இரண்டு கண்கள் இருந்தன. கண்கள் தொலைந்து போனாலும், அதன் பார்வைகளை திரும்ப தராத இரவல் போல் சேர்த்து வைத்திருந்தாள். நினைவுகள் இன்னும் இனித்தன.'பிரான்சிஸ், எத்தனை அழகாய் அவனோடு குடும்பம் நடத்தி இருக்கலாம்' அவனோடு சேர்ந்து வாழ்வது போன்ற கற்பனைகளை அவள் ஒதுக்கி வைத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன,, இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அன்று ஏனோ மேலெழும்பின..மறுபடியும் 'உவ்வே', அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

பள்ளிக்கூடம் வழக்கம் போல் அவளை வரவேற்த்தது. முட்கள் நிறைந்த அவள் வாழ்க்கையில் கொஞ்சம் மகரந்தம் தூவியது இந்த பள்ளிதான். கை எழுத்து போட ஹச்.எம். அறையில் நுழைந்தவள் சிலை போல் நின்றாள். கண்கள் சொல்வதை மூளை ஏற்றுக் கொள்ள வில்லை. இதயம் ராக்கெட் வேகத்தில் துடித்தது. அவனே தான், அவன் எப்படி இங்கே! இதழ்கள் மொழி மறக்க, கண்கள் பேச எத்தனித்தன. 
' என்ன இந்து, அப்டியே நின்னுடீங்க?' ஹச்.எம் அன்பாய் கேட்டார். 
'ஒன்னும் இல்ல மேடம், ஏதோ தூசி விழுந்துடுச்சு'.
'பாத்து வரதில்லையா, சரி, இவர் பிரான்சிஸ் சகாயதேவன், நம்ம சுந்தரம் சார் 6 மாசம் கழிச்சுதான் வருவார். இவர் அது வரைக்கும் டெம்பரவரி யா நாலாங் கிளாஸ் பாடம் எடுப்பார். பிரான்சிஸ், இது இந்து, மூனாங் கிளாஸ் டீச்சர்.' என்று அறிமுகம் செய்து வைத்தார். தன்னை தனக்கே அறிமுகம் செய்து வைத்த ஹச்.எம் ஐ வேடிக்கையாய் நினைத்து விட்டு, 'வணக்கம்' என்று பட்டும் படாமலும் சொல்லி வைத்தான். அவள் மெதுவாய் முனகி விட்டு அங்கிருந்து வேகமாய் நகர்ந்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, அன்று எதுவும் புலப்பட வில்லை. பாடத்தில் கவனம் செல்ல வில்லை. எந்த சலனமும் இல்லாமல் அவன் பக்கத்து அறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தது அவளுக்கு கேட்டது. 2 நாட்கள் ஓடியது, விசை கொடுத்த பொம்மை போல் அவள் இயங்கிக் கொண்டிருந்தாள்.  அவனிடம் பேச அத்தனை  ஆசை,ஆனால் துணிவு வரவில்லை. 3 ஆவது நாள் உணவு நேரத்தில் அவனே பேச வந்தான். 
'இந்து', அவன் அழைத்தது அவள் வாழ்வில் மறைந்து போன இசை மீண்டும் வந்தது போல் இருந்தது. வினாடி பொழுது கண்கள் கலந்தன. குழந்தைகளின் இரைச்சல் அவளை நிலத்திற்கு அழைத்து வந்தது. சுதாரித்துக் கொண்டு, சுற்றும் முற்றும் யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டாள். 'இன்னும் அடுத்தவங்களுக்கு பயந்து தான் வாழ்ந்துட்டு இருக்கியா இந்து?'. அவன் வார்த்தைகள் சட்டென சுட்டன. வலியை மறைத்துக்கொண்டு, 'எப்டி இருக்க பிரான்சிஸ், உன்ன பாத்ததும் எவ்வளவு சந்தோசம் தெரியுமா?' மறுபடியும் அனிச்சையாய் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டாள். 'எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல தெரியுமா'.
'ஏன் இந்து, நான் வந்தது உனக்கு கஷ்டமா இருக்கா?', கிண்டலாய் சிரித்தான்.
'என்ன பேசுற பிரான்சிஸ்!' சில நொடிகள் அமைதியாய் கடந்தன. அவனாய் எதுவம் பேசவில்லை.
'அது சரி, வேற ஊருக்கு போய்டதா சொன்னாங்க??'
'ஆமா, கொடைகானல் போய்டோம் எல்லாரும். வேற ஊர், வேற உலகம். ' அமைதியாய் சொன்னான்.

'ம்ம்...அப்புறம் எப்டி இந்த பக்கம்?' சட்டென ஏதோ நினைத்தவளாய், 'சாமி, ஏன் வந்தன்னு கேட்கலப்பா' என்றாள். அவள் இப்படி பேசி பல காலம் ஆகி விட்டது.

அவன் அமைதியாய் பதில் சொன்னான் 'நம்ம மேல அன்பு இருக்குறவுங்க நம்மள நினைச்சா நமக்கு தெரியும்னு சொல்லுவாங்க. நீ என்ன பத்தி நினைச்சன்னு தோனுச்சு, அதான் உன்ன பாக்க வந்துட்டேன்.'. 

அவள் முகம் மாறியது. அதை உணர்ந்தவனாய் ' கிண்டலுக்கு சொன்னேன் இந்து, டீச்சர் வேல காலின்னு விளம்பரத்த பாத்து வந்தேன், உன்ன பாத்ததும் பயங்கர சந்தோசம்'.

மறுபடியும் என்ன பேசுவதென்று புரியாமல் போக, 'சரி, சாப்ட வா, ஸ்டாஃப் ரூம் போலாம்' என்றாள். 'நமக்கு வெளில தான் சாப்பாடு, நீ கிளம்பு' என்று சொல்லிவிட்டு பட்டும் படாமலும் கிளம்பினான்.

                         ________________________________________
7-Oct-2013(ஒரு வாரம் முன்பு)
பிரான்சிஸ் வந்த  பின்பு,கடந்த மூன்று மாதங்கள் இந்துவின் நாட்கள் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்தன. இப்போதெல்லாம் அவள் புருஷனின் 'உவ்வே' அவள் காதுகளில் விழுவதே இல்லை. நாளுக்கு மூணு வேளை சாப்பிட தொடங்கி இருந்தாள். புதிதாய் சில புடவைகள் கூட எடுத்தாள். வெறும் பொட்டு வைக்க மட்டும் பார்த்திருந்த கண்ணாடியுடன் கணிசமான நேரம் உரையாடினாள். பள்ளியில் அங்கும் இங்கும் இயல்பாய் சிரித்துக் கொண்டார்கள், நேரம் கிடைக்கும் போது விளையாட்டாய் பேசிக் கொண்டார்கள். விளையாட்டு பேச்சு, சமூகம் அவளுக்கு போட்டுள்ள கோட்டை லேசாக தொடும் போதெல்லாம் அவள் விலக முயன்றாள். இருந்தாலும் இந்த மாற்றங்கள் அவளுக்கு பிடித்திருந்தன. நடைபாதைகள் வானவில்லாயின, குழந்தைகள் தேவதை ஆனார்கள், காற்று வாசமானது, உடல் எடை இழந்து பறந்தது.

நாட்கள் நகர நகர காலெண்டர் காகிதம் போல் அவளது வரையறைகள் மறைய தொடங்கின. அதை அவள் உணரத் தொடங்கியதும் பயம் பற்றிக் கொண்டது. அவளது புதிய சிறகுகளை, உலகம் எச்சில் துப்பி சிதைத்து விடும் என்று எண்ண தொடங்கினாள். ஒரு பக்கம் அவன், ஒரு பக்கம் உலகம், நடுவில் இரண்டாய் பிரிந்து ரத்தம் கசிந்து கொண்டு அவள். அவளது நிலைபாட்டை அவன் உணராமல் இல்லை, ஆனால் அதற்க்கு அவன் கவலை படுவதாக அவளுக்கு தெரியவில்லை. இது சரி இல்லை என்று அவளுக்கு பட்டது. இன்று அவனுடன் பேசி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தாள். முடிந்தால், அவனை உடனே ஊரை விட்டு போக சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அவனுடன் இதெல்லாம் பேச அவளுக்கு நேரம் தேவை பட்டது. ஸ்கூலில் பேச முடியாது, ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு இடத்தில அவனை மாலையில் சந்திப்பதென முடிவு செய்தாள்.

காற்று இதமாய் வீசியது, அவனும் அவளும் அங்கே நிசப்தத்தின் சங்கீதத்தை ரசித்து கொண்டிருந்தனர். நேரம் கடத்த முடியாது, அவள் தொடங்கினாள். 
'ஏன் பிரான்சிஸ் ஏன், எதுக்கு என்னோட எடத்துக்கு வந்த நீ?', ஆற்றாமை, இந்த முறை அவளுக்கு.

'கரெக்ட் இந்து, நான் எதுக்கு உன்னோட எடத்துக்கு வந்தேன். பேசாம என் கூட வா, என்னோட எடத்துக்கு போலாம், நம்ம எடத்துக்கு போலாம்'. அவன் சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசுவான் என அவள் எதிர் பார்க்கவில்லை. 

'என்ன பேசுற பிரான்சிஸ், நீ மொதல இங்க இருந்து போய்டு. நீ நெனைக்கிற எதுவும் நடக்காது!'

' எல்லாம் நடக்கும் இந்து, நான் நெனைக்கிறது தான் நீயும் நெனைக்கிற, ஊருக்கு பயந்தது போதும் இந்து.'

'நான் முடிஞ்சு போன ஒரு கத, என்ன விட்டுட்டு நீ ஒன்னோட வழிய பாரு', அவள் சொல்லி முடிக்கையில், அவள் இதழ்கள் அவன் இதழ்களால் சிறை பிடிக்க பட்டன. ஆண்மையின் ஆளுமையை முதன் முதலில் உணர்ந்தாள். இத்தனை காலத்தில் அவன் காதல் கொஞ்சமும் குறைய வில்லை என்பதை அந்த முத்தம் அவளுக்கு உணர்த்தியது. எங்கோ ஒரு இடி சத்தம்... சட்டென அவனை தள்ளி விட்டாள். அவளது புத்தி தடுமாறியது, 'உன்ன கெஞ்சி கேக்குறேன் பிரான்சிஸ், நீ போய்டு ' என்று கதறினாள். அவன் கண்கள் கோபத்தில் சிவந்தன. இத்தனை கோபமாய் அவனை அவள் பார்த்ததில்லை. பயத்தில் பின்னோக்கி நடந்தாள். அவன் விடாமல் முன்னேறினான், அந்த ஆண்மை அவளை பயத்திலும் சிலிர்க்க வைத்தது. அவள் அருகில் வந்து, அவள் கழுத்தை அழுத்தமாய் பற்றி, ஆவேசமாய் கேட்டான் ' மனச தொட்டு சொல்லு இந்து, என் கூட இருக்க உனக்கு இஷ்டம் இல்ல???'
                            __________________________________
12-Oct-2013
சனிக்கிழமை என்பதால் பள்ளியில் யாரும் இல்லை. ஹச்.எம் மை பள்ளிக்கு வர சொல்லி தானும் அங்கு வந்தான் சௌந்தர். 
'என்னய்யா, இந்து எங்க இருக்கான்னு தெரிஞ்சுடுச்சா?'

'இல்ல அத்த, ஆனா, அந்த ஆள் பிரான்சிஸ் குடுத்த அட்ரெஸ் போலி, அப்டி ஒரு எடம் இல்லவே இல்ல'

'என்னய்யா சொல்லற, அந்த பையன் ரொம்ப நல்லவனா இருந்தானே'

'அவென் எனக்கு சரியா படல அத்த, நான் ஸ்டேஷன் ல சொல்லி விசாரிக்க சொல்லி இருக்கேன். அந்த பொண்ணோட போட்டோ அவ வீட்ல இருந்து எடுத்தேன், அவனோட போட்டோ இருக்குதா ?'

'ஒரு நிமிஷம் யா, வேலைக்கு போட்ட அப்ளிகேஷன் ல இருக்கும்.', எழுந்து சென்று ஒரு கோப்பை புரட்டி பார்க்கையில்அதிர்ச்சியானார், ' சௌந்தரு, அந்த அப்ளிகேஷன் மட்டும் காணல யா'.

'நான் நெனச்சது சரியா இருக்கு அத்த, அந்த ஆளு எதோ பிளான் போட்டுதான் வந்து இருக்கான். அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் முன்னாடி பழக்கம் இருந்திருக்கு, அத பத்தி  அப்புறம் சொல்றேன் அத்த. வேற எதுவும் போட்டோ இருக்கா?'

'போன மாசம் ஈ.ஓ(E.O) வந்த போது ஒரு போட்டோ எடுத்தோம், ஒரு நிமிஷம்', என்று மறுபடியும் இன்னொரு கோப்பை எடுத்து புரட்டினார். இந்த முறை முகம் இன்னும் மிரண்டது, சட்டென சௌந்தர் அந்த கோப்பை வாங்கி பார்த்தான். ஒரு முகம் மட்டும், யாரோ உப்புக் கல்லால் தேய்த்தது போல் மறைந்திருந்தது. 

'அவென் கிரிமினலா வேல செஞ்சிருக்கான் அத்த, இந்த போட்டோ வையும் டேமேஜ் பண்ணி இருக்கான் அவன். இவ்வளவு வேல பண்ணவன்,  ஒன்னு அந்த பொண்ண ஏமாத்தி கூட்டிட்டு போயிருப்பான், இல்லாட்டி கடத்திட்டு கூட போயிருப்பான்.' 
சௌந்தர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செல்லுலார் கனைத்தது. அதை காதிற்கு கொடுத்தவன், ' என்னது,.... எங்க???.... சரி, நான் 30 நிமிசத்துல வரேன் ' என்று சொல்லி அணைத்தான். முகத்தில் குழப்பமும் பதற்றமும் நன்றாய் தெரிந்தது. 

'அத்த, நீங்க என் கூட  அர மணி நேரம் ஒரு எடத்துக்கு வரீங்களா?'

'என்னய்யா, எதாவது பிரச்சனையா?' என்று பயத்துடன் கேட்டார்.

'ஒன்னும் இல்ல அத்த, நீங்க வாங்க' என்று சொல்லி இருவரும் கிளம்பினர்.

அரை மணி நேரத்தில், ஊருக்கு வெளியில் ஒரு தோப்புக்கு இருவரும்  வந்து சேர்ந்தனர். ஆறேழு ஆட்கள் கூடி பதட்டமாய் பேசிக் கொண்டிருந்தனர் , அவர்களை தாண்டி ஏதோ மூடி வைக்க பட்டிருந்தது. போலிஸ் ஒருவர் வேகமாய்  ஓடி வந்து, 'அந்த பொண்ணுதான்னு நெனைக்கிறேன் சார், மொகம் அவ்வளவு சரியா தெரியல, ஆனா உடம்புல எதுவும் ரத்த காயம் இருக்குற மாதிரி தெரியல. கண்ண மூடி அமைதியா தூங்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு' என்று ஒப்பித்தார்.

'அத்த , பயப்படாதீங்க, இது அந்த பொண்ணு இந்து வான்னு மட்டும் பாத்து சொல்லுங்க'. ஹச்.எம் முகத்தில் பயமும், பதட்டமும் வியர்வையாய் வழிந்தது. மெதுவாய் மூடி இருந்த துணியை விலக்கினார்கள். பார்த்ததும், ஹச்.எம் அப்படியே மயங்கி  விழுந்தார். சௌந்தர் அவரை தாங்கிப்பிடிக்க, இன்னொரு போலீஸ் வேகமாய் சென்று ஜீப்பில் இருந்து பாட்டில் ஒன்று எடுத்து  வந்தார். தண்ணீர் அடித்து அவரை எழுப்பியதும், லேசாய் கண் விழித்தவர் 'இந்து.....' என்று கதறி அழ தொடங்கினார்.
                       _____________________________________


அதே நாள், வேறொரு இடத்தில் 

அமைதியான காற்று சுகமாய் இருந்தது.
'இந்த ஒரு வாரம் போல நான் எப்பவும் சந்தோசமா இருந்ததில்ல பிரான்சிஸ்'

'இனி நம்மள பிரிக்க யாராலயும் முடியாது இந்து' . சந்தோசமாய் கண்ணடித்தான்.

'அது சரி, அன்னைக்கு அவ்வளவு கோபமா என் கூட வா ன்னு கூப்டயே, நா சரின்னு சொல்லாம முடியாதுன்னு சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப?'

'நீ அப்டி சொல்ல மாட்டன்னு எனக்கு தெரியும் இந்து. ஒரு வேல, நீ அப்டி சொல்லி இருந்தா, உன்ன தொந்தரவு பண்ணாம மறுபடியும் தனியா இங்க வந்திருப்பேன்'

'சரியான லூசுடா நீ, நான் போன தடவ பிரிஞ்சு போன போதே நீ என்ன தூக்கிட்டு போய் இருந்தா இவ்வளவு பிரச்சினையே இல்ல. பெரிய நல்லவனாட்டம் இந்த தடவையும் விட்டுட்டு வந்திருப்பானாம். நான் இப்ப எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா. இனி எப்பவும் உன் கூடத்தான்..'

இருவரும் சிரித்துக் கொண்டிருக்கையில் நட்சத்திரங்கள் அவர்களைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. இருவரும் பூப் போல் எழுந்து நடக்க தொடங்கினர். கல்லறைக்  காடு  அமைதியாய் ,ஆனந்தமாய் இசைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் அமர்ந்திருந்த கல்லில் அழகிய பூக்கள் சிதறிக் கிடந்தன. பூக்களுக்கு கீழே அழுத்தமாய் பதித்திருந்தது ' பிரான்சிஸ் சகாயதேவன், தோற்றம் : 5-Feb-1987, மறைவு : 6-Jan-2011'.



காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...