ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

செவல

'சரவணா, கொஞ்சம் அந்த ஏ.சி.ய அமத்துப்பா, நான் ஜன்னல தொறந்து வச்சுகிறேன்'. பொத்தானை அழுத்தியதும் ஜன்னல் கண்ணாடி சீரான வேகத்தில் கீழ் நோக்கி நகர்ந்தது. பல நேரங்களில் இந்த சத்தம், வண்டின் ரீங்காரத்தை நினைவு படுத்துவதாய் இருக்கிறது. முத்துசாமியின் கண்கள், தாயின் மார் காணும் பிள்ளை போல் ஆனது. மெலிதான காட்டராக்ட் திரைகள் தாண்டி ஜீவன் நிறைந்த அந்த ஒளி உள்ளே நுழைந்தது. நான்கு வழி தார் சாலையில் இஞ்சின் சூடேற ஓடி வந்த கார், கிராமத்து குழிகளில் தனது உடலை அப்படியும் இப்படியும் முறுக்கி இளைப்பாறிய வண்ணம் நடை பழகிக் கொண்டிருந்தது. அழகான நிலவே சென்றாலும் மீண்டும் பூமிக்கு வருவது சுகம். தூரத்து கண்மாய், சாலையின் இரு புறமும் பச்சை கூந்தல் விரித்திருந்த பூமிப் பெண், எங்கோ மெல்லியதாய் கேட்கும் மாடுகளின் சலங்கை, காற்றின் ராகத்தோடு சுதி சேர்த்து பாடும் பறவைகள், முன்னும் பின்னும் தொட்டில் ஆட்டி தாலாட்டும் குழிச் சாலைகள், சுமைகள் எல்லாம் அவிழ்த்து விட்டு நிர்வாணமாய் நிற்கும் சிறுசுகள், அத்தனை இயக்கத்துக்கு நடுவிலும் எங்கும் நிலவிய அமைதி.  இங்கேயே இருந்த போது தாய் சமைக்கும் சோறு போல, அதன் ருசி தெரியாமல் இருந்தது.

'சரவணா, அது செல் போன் டவரு தான?'.
' ஆமா சார், பரவா இல்லையே, சின்ன ஊர்லயும் இப்பல்லாம் சிக்னல் பிரச்சன இருக்காது போல இருக்கே. நாடு எங்கயோ போகுது போங்க', பெருமையாய் சொன்னான். நாடு எங்கேயோ தான் போய் கொண்டிருக்கிறது. உள்ளுக்குள் நினைத்ததை அமைதியாய் முழுங்கி கொண்டார்.  முன்பு வாழ்க்கை ஓடி கொண்டிருந்த போது விஞ்ஞானத்தின் வேகமான  வளர்ச்சி கண்டு ஆச்சர்ய பட்டதுண்டு. இப்போதெல்லாம் வேகத்தின் மீது சலிப்பே ஏற்படுகிறது. சொந்த ஊருக்குள் நுழையும் போது உள்ளே இருக்கும் பழைய நினைவுகள் நீருள் குமிழி போல மேலே வரத் தொடங்கின. சட்டென ஏதோ நினைவில் விழ, சட்டை பாக்கெட்டில் கங்காரு குட்டி போல் படுத்திருந்த கைபேசியை எடுத்து, கண்களை கூர்மையாக்கி பொத்தான்களை அமுக்கினார்.

'ராஜா, ஊருக்கு வந்து சேந்தாச்சுப்பா.'
...............
'ஆமாமா, சரவனெ மெதுவாத்தான் வந்தாப்ள'
..............
'இப்போ மீனாவுக்கு எப்டி இருக்கு? வலி வந்துடுச்சா??' - கேட்கும் பொது நெற்றியில் விழுந்த சுருக்கங்கள் உண்மையான அக்கறையை பதிவு செய்தன.

'நீ பக்கத்துலயே இரு தம்பி. நம்ம பாண்டி தொண இருப்பான்.'
...................
'சரிப்பா, நா வச்சுடறேன்..நீ பாத்துக்கப்பா'

முகத்தை மேல் நோக்கி, கைகள் உயர்த்தி 'பாண்டிஈஈ , ஓம்பிள்ளைய சோதிச்சது போதுஞ்சாமி' என்று மல்கினார்.

நிகழ்காலத்தின் கலவரங்களும், கடந்த காலத்தின் நினைவுகளும் மாறி மாறி மனது எதோ பண்ணியது. இதே சாலையில் தான் தினமும் ஆற்றுக்கு போவார்கள். மகன் ராசபாண்டியையும் மகள் சுந்தரியையும் தோளில் தூக்கி பல முறை சவாரி செய்திருக்கிறார். பிள்ளைகளின் பால்யம் தாண்டி நினைவு அவள் மீது படர்ந்தது. எத்தனை முறை முயன்றாலும் அவர் தோற்று போகும் விஷயம் அது. மனதை அரிக்கும் அவள் நினைவுகளை தள்ளி வைக்க முடிய வில்லை. பொன்னுத்தாயை பெண் பார்க்க போனது தெளிந்த நீரோடை கீழ் நிலம் போல் இன்னும் நினைவில் நிற்கிறது. அவளை குழந்தையாய் ஒரு முறை மடியில் கூட வைத்த ஞாபகம் இருக்கிறது. மாமன் மகள் என்ற உரிமையில் அவளை பல முறை வம்பிழுத்ததுண்டு. தன்னை பார்த்து எப்போதும் அவள் கொஞ்சம் பயந்ததது சுகமாய் தான் இருந்தது. 'ஓம் பொஞ்சாதிய தூக்கிட்டு வாடா, ஓம் மாமெ என்ன பண்ணிடுவான்னு பாத்துக்குவோம்' என்று பிள்ளை பருவத்தில் அம்மா சொன்ன போது பொஞ்சாதி என்றால் என்ன என்பது சரியாய் புரியாவிட்டாலும், அவள் மீது தனக்கு உரிமை இருப்பது ஆழமாய் புரிந்தது. மீசை முளைத்த பருவத்தில் பாவாடை போட்ட பொன்னுத்தாயி அவர் கண்களுக்கு தண்ணீர் குடம் தாங்கிய தேவதையாய் தெரிந்தாள். வயற்காட்டில் இருந்து ஒரு நாள் வரும் போது வீட்டில் எல்லாரும் பரபரப்பாய் இருந்தனர். 'எம் பேத்தி குத்த வச்சுடாடாமுத்து' என்று அம்மாயி உற்சாகமாய் சொன்னாள்.  சின்ன மாமா, ' என்ன மருமவனே, இன்னிக்கே பேசி முடிச்சிடுவோமா?'  என்று வம்பிழுத்தார்.

கிரீச் என்ற சத்தம் நினைவுகளை சட்டென மறைய செய்தன.
' எண்ணே, பாத்து போக மாட்டியா, வண்டி வருதுல' - சரவணன் உச்ச ஸ்தாதியில் கத்தினான்.  கோபம் வந்தாலும் அவருடைய கிராமத்தில் மரியாதை குறைவாக பேசுவது முத்துசாமிக்கு பிடிக்காது என்பது சரவணனுக்கு தெரியும். அதனால் தான் கோபத்திலும் 'அண்ணே' என்று சொல்லி கத்தினான்.

'சரவணா பாத்துப்பா', என்று சொல்லும் போதே, சைக்கிளில் இருந்து கோபமாய் இறங்கி வந்தான் அவன். வேகமாய் எதோ சொல்ல வந்தவன் பார்வையை உள்ளே செலுத்தியதும், ' பெரியப்பா' என்றான் உற்சாகமாய் .

'பெரியப்பா, நீங்கதானா... வண்டிய பாக்கும் போதே எனக்கு புரிஞ்சிருக்கனும். நல்லா இருக்கீங்களா?? தம்பி எப்டி இருக்கான்?' அன்பாய் கேட்டான்.
'சங்கரா, எப்டிப்பா இருக்க?, சரவணா வண்டிய நிப்பாட்டிக்கோ பா' என்று சொல்லி விட்டு வண்டியை விட்டு இறங்கினார்.

'அம்மா நல்ல இருக்காங்களா?

'இருகாங்க பெரியப்பா, அப்பா தவறினதுல பாதி ஆயிடுச்சு, ஆனா முன்னைக்கு இப்ப பரவாயில்ல, நீங்க சொகந்தானா? ஆள் எளச்சுடீங்களே, மீசைய வேற எடுத்துடீங்க, மொதல்ல எனக்கே அடையாளம் சரியா தெரியல போங்க' இயல்பாய் பேசினான். முத்துசாமி மெல்ல சிரித்துவிட்டு,
'பேரேன் குத்துதுன்னு எடுக்க சொல்லி ஒரே பிடிவாதம். சரி, என்னென்னவோ போச்சு, மசுரு கழுத தானன்னு எடுத்துட்டேன்.'

'சரி பெரியப்பா, ரோட்லயே நின்னு ஏம் பேசிக்கிட்டு,  வீட்டுக்கு போலாம், இன்னைக்கு கடா அடிச்சிடுவோம். போன தடவ ரெண்டு நாளும் மாமே  வீட்லயே இருந்துடீங்க, இந்த மொற நம்ம வீட்லதா' என்று அடுக்கி கொண்டே போனவனை மறித்து,
'சங்கரா, நா இன்னு கொஞ்ச நேரத்துல கெளம்பிடுவேம்பா, இப்போ தங்குற மாதிரி வரலப்பா' என்றதும், கொஞ்சம் கோபம் வந்தவனாய்,
'அது சரி பெரியப்பா, சிட்டி மனுசனா ஆகிடீங்க, நாங்க என்ன சொல்ல முடியும். விருந்தாளி தான இப்ப' என்று கோபித்தான் உரிமையாக.
' அட, இல்லடா தம்பி, ஒந்தம்பி பொஞ்சாதி முழு மாசமா இருக்குப்பா.. நாள் தள்ளுது, வலி வரல...ஆஸ்பத்திரில ஏதேதோ சொல்றாங்க, மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, அதான் பாண்டியப்பன பாத்து நாலு வார்த்த கேட்டுட்டு போலாம்னு வந்தேம்பா, ஒடனே திரும்ப போகணும், தம்பி தனி ஆளா கஷ்ட பட்டுட்டு இருப்பான்'. அவர் சொன்னதை கேட்டவன், கொஞ்சம்  அமைதி ஆகிவிட்டு ஆறுதலாய் பேசினான்.

' விடுங்க பெரியப்பா, நெலம தெரியாம பேசிட்டேன், மன்னிச்சிடுங்க, நீங்களும் பெரியம்மா வும் செஞ்சிருக்கற புண்ணியத்துக்கு ஒன்னும் ஆகாது'

'சரிப்பா, நா கெளம்புறேன், நீதான் மத்தவுங்ககிட்ட எல்லாம் சொல்லணும், யாரையும் கோச்சுக்க வேண்டாம்னு சொல்லுப்பா, கொழந்த பொறந்ததுக்கு அப்புறமா வந்து ஒரு வாரங் கூட தங்கிட்டு போறேன்'

'சரி பெரியப்பா, நீங்க கவல படாம , நேரத்துக்கு கெளம்புங்க' .

கார் மீண்டும் புறப்பட்டது, நினைவுகளும் கூடத்தான் . பெரியம்மாவை பற்றி அவன் சொன்னதில் எந்த மிகையும் கிடையாது என்று அவருக்கு தெரியும். இந்த சங்கரன் பிறக்கும் போது கூட, பிரசவம் முழுதும் பொன்னுத்தாயி உடன் இருந்தாள். மிகவும் அன்பானவள், அழகானவள். அவள் வயசுக்கு வந்ததும் இவர்கள் கல்யாணம் பற்றி பெரியவர்கள் பேசத் தொடங்கினார்கள். முத்துசாமியின் தந்தை அந்த காலத்தில் முற்போக்கு வாதி. நல்ல மனுஷன்.' மொதல்ல, வெவசாயத்த தனியா பாத்துகிட்டு, சொந்த கால்ல நிக்கட்டும், அப்புறம் தொரைக்கு கல்யாணம்  பண்ணலாம்' என்று தீர்க்கமாய் சொன்னார். சொன்னதோடு, தனது வயக்காட்டில் ஒரு பகுதியை முழுசாய் முத்துசாமிக்கே கொடுத்து, தனியாய் பார்க்க விட்டார்.
பதின் பருவம், இவள் தான் தன்னோடு வரப் போகின்றவள் என்ற உணர்வு, அனைத்தும் சேர்ந்து அவள் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. அதற்கப்புறம் வந்த ஒவ்வொரு விஷேசத்தின் போதும் அவளை கண்களால் விழுங்க தொடங்கினார். அவளை வம்பு செய்வது குறைந்து அவளுக்காக ஏங்குவது தொடங்கியது. அவளை சீக்கிரம் அடையும் நோக்கத்திலேயே இரவும் பகலும் தொழிலை உள்ளும் புறமும் அலசி கற்றுக் கொண்டிருந்தார். அவள் ஆற்றுக்கு போகும் நேரத்தில், அந்த பாதையில் உள்ள தனது நிலத்திலே வேலையே அமைத்துக் கொண்டு, அவளை பார்க்காதது போல் பார்ப்பதில் சுகம் கண்டார். கவனம் சிதறி சில முறை கைகால்களை காயப் படுத்தி கொண்டதும் உண்டு.  அது வரை இயல்பாய் வரும் அவள், அந்த இடத்தில் மட்டும் இவர் பக்கம் பார்க்காமல் இருக்க, தலை குனிந்து நடப்பாள். தான் பார்க்கா விட்டாலும் தன் மீது இரு கண்கள் அலைவதை உணர்ந்தவள், வெட்கத்தை தெளித்து கொண்டே போவது அவள் மேல் இருக்கும் காதலை அதிக படுத்தியது .  இரண்டு வருடம்  கழிந்து ஒரு நன்னாள் அவள் கரம் பற்றி உடன் அழைத்து வந்தார். முதலில் காமத்தின் பாதியே ஓங்கி இருந்தாலும், நாளுக்கு நாள் அவள் மீது காதல் வலுத்தது. ஒரு வேலை அவர் சாப்பிட தாமதமானாலும் துவண்டு போனாள், நேரத்திற்கு வீடு திரும்பாத நாட்களில் கலங்கி விடுவாள். இத்தனை அன்பை அவர் அம்மாவிடம் மட்டுமே  அனுபவித்தது. அவர் மீது மட்டும் இன்றி, தேவை என்று வீட்டுக்கு வந்த எல்லாருக்கும் முகம் சுளிக்காமல் வேண்டியதை செய்தாள். வீடு முழுக்க அன்பால் நிறைத்து இருந்தாள்.
'எம் மருமக நம்ம கொல தாயி டா, அவ மனசு கஷ்ட படாம பாத்துக்க' என்று அம்மா பல முறை சொல்லி இருக்கிறாள். முதல் இரண்டு குழந்தை தவறிய போது கூட மனம் கலங்காமல், ' சாமிக்கு தெரியும் மாமா, நமக்கு என்ன சரியோ அத பாண்டி பாத்துக்குவான்' என்று தைரியமாய் பேசுவாள். காலம் ஓடியது, அவள் சொன்னது போல இரண்டு பிள்ளைகள் பிறந்து நன்றாகவே வளர்ந்தன. ஒரு மகன், ஒரு மகள் சேர்த்து அந்த வீட்டில் மூன்று பிள்ளைகளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டாள். படிக்காதவள், பிள்ளைங்களுக்கு புத்தகம் படிக்க அவள் உதவியதில்லை, ஆனால் வாழ்க்கையை அழகாய் சொல்லித் தந்தாள். நல்ல பண்புகளோடு வளரும் குழந்தைகள் அறிவு குறையாமலேயே வளர்கின்றன. அவளோடு வாழ்ந்த காலம் அவருக்கு வேகமாய், ஆனால் ஆனந்தமாய் நகர்ந்தது. சில காலத்திலேயே, பிள்ளைகள் வளர்ந்து கல்லூரி வயது வரை வந்தது போல் இருந்தது. இரு பிள்ளைகளும் வெளியூர் போய் படிக்க கேட்ட போதும் அவர்கள் முடிவுக்கு துணையாகவே இருந்தாள். 'தூரம் என்பது அன்பின் அளவுகோல் அல்ல. வாழ்க்கை போகும் பாதையில் போவது பிழையும் இல்லை' என்று அவருக்கு புரிய வைத்தவளும் அவள் தான். விடுமுறைக்கு பிள்ளைகள் ஊர் வந்து போகும் காலம் தவிர மீத நேரம் முழுவதும் அவளுடைய அரவணைப்பை முழுவதுமாய் முதிர்ந்த பிள்ளையே அனுபவித்து கொண்டிருந்தது.ஒரு நாள் அதற்கும் ஒரு போட்டி வந்தது.

கோவிலுக்கு பின்புறம் ஆற்றுக்கு பக்கத்தில் இருக்கும் அம்மனுக்கு விளக்கு வைக்க சென்றவள் அங்கே எதோ முனகல் சத்தம் கேட்டு தேடித் பார்த்தாள்.  கொஞ்சம் தள்ளி மரத்துக்கு கீழே அழகாய் பஞ்சு சேர்த்து வரைந்த ஓவியம் போல் ஒரு நாய்க்குட்டி இருந்தது. கண்கள் கூட இன்னும் முழுதாய் திறக்காத குட்டி. அங்கு எப்படி வந்தது என்று தெரியாது, அதை ஆராயவும் தோன்றவில்லை. அப்படியே எடுத்து மாரோடு அணைத்துக் கொண்டாள். நிலம் சுற்றிய நீர் போல் போல், அங்கங்கே வெள்ளை கருப்பு திட்டுகளை சுற்றி, பொன்னிற சிவப்பு நிறம்.  மறுபடியும் தாய்மை அடைந்தது போல் ஒரு உணர்வு. 'ஏ செவல குட்டி, எங்க இருந்து இங்க வந்தீங்க' என்று கொஞ்சியபடி அப்படியே வீட்டுக்கு அழைத்து வந்தாள். எந்த புன்னியாஞ்சலமும் இன்றி 'செவல' என்ற பெயர் சூட்டப்பட்டு புது குழந்தை வீட்டுக்கு வந்தது. முதல் சில நாட்கள் பஞ்சில் பால் நனைத்து ஊட்டினாள், பிறகு ஒரு பால் பாட்டில் வைத்து கிட்டத்தட்ட அவள் குழந்தைகளை பார்த்துக் கொண்டது போல் பார்த்துக்கொண்டாள். வெளி வேலைகள் முடித்து வீட்டுக்கு வந்த பின்னர் அவரும் செவலையோடு நிறைய நேரம் செலவழித்தார். அவனை குளிப்பாட்டி, தட்டில் சோறு வைத்து, அவன் முடியை கோதி விட்டு, உடம்பை திருப்பிக் கொண்டு வயிற்றில் கை வைத்து கொஞ்ச சொல்லும் அவனோடு விளையாடுவது என்று இருவருக்கும் அவனோடு நேரம் நன்றாகவே கழிந்தது. காலையில் அவள் விழித்ததும் அறை வாசலில் வாலாட்டிக் கொண்டு வந்து நின்று விடுவான். அவள் சேலையை முட்டிக் கொண்டு முகத்தை அப்படியும் இப்படியும் சிலுப்பி, நாள் முழுவதும் அவளோடவே களிப்பான் .  அவள் உடல் நோவில் படுத்தாள், அவனும் சோறின்றி கிடப்பான்.  வெளியே சென்றால், நிழல் போல அல்ல, விரல் போல கூடவே சுற்றித் திரிவான். அடுத்த நான்கு வருடங்களில் வீட்டில் இரண்டு கல்யாணங்கள் நடந்து முடிந்தன. வீட்டிற்கு புதிதாய் வந்தவர்களை எந்த கஷ்டமும் இன்றி குடும்பத்தோடு இணைத்து கொள்ள அவளும் அவனும் அவர்கள் மீதும் அன்பை பொழிந்தார்கள். சுந்தரியின் கற்ப காலத்தில், பக்கத்தில் பிராணிகள் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னது அவனுக்கு எப்படி புரிந்தது என்று தெரியவில்லை. அந்த காலம் முழுவதும் திண்ணை தாண்டி உள்ளே வருவதை கிட்ட தட்ட நிறுத்தி இருந்தான். புத்திசாலி பிள்ளை. பேரப் பிள்ளை வந்தாலும், வளர்ப்புப் பிள்ளையை ஏங்க விட்டதில்லை அவள்.

வாழ்க்கை விசித்திரமானது. ஒரு நாள் கை நிறைய கொடுக்கும், ஒரு நாளில் இருக்கும் அத்தனையும் பறித்துக் கொள்ளும். வழக்கமாய் இரவில் உறங்க சென்ற அவள், ஒரு நாள் காலையில் விழிக்க வில்லை. எந்த வலியும் இன்றி போய் சேர்ந்தாள் புண்ணியவதி. எந்த வழியும் இன்றி நின்றிந்தார் அவர். நிழல் கொடுத்து மரம்,  வெயிலில் விட்டுவிட்டு விழுந்தது. இனி குடை பிடித்த வாழ வேண்டிய நிலை. உடைந்து போனார். அடுத்த சில நாட்கள் செவலயும் எதுவும் சாப்பிட வில்லை. தினமும் காலையில் அறை வாசலில் கண்ணில் நீரோடு  வாலாட்டி கொண்டே நின்றான். மூன்று வாரம் கடந்து இருக்கும். காலையில் வாசலில் அவன் வந்து நிற்கவில்லை. பிள்ளை தவறினால் செய்யும் அத்தனை ஈம காரியங்களையும் செய்து முடித்து வீட்டுக்கு வந்த முத்துசாமிக்கு முதல் முறையாய் உயிர் சுமையாய் தெரிந்தது.வாழ்க்கையை அதன் போக்கில் வாழ சொல்லித் தந்தவள் இன்றில்லை. நினைவுகள் முள் படுக்கையாய் மாறியது. அவள் நிறைந்திருந்த வீடு இருண்டிருந்தது. பிள்ளைகள் கலங்கி போனார்கள். மருமகள் மீனா எல்லா வாரமும் வந்து பார்த்துக் கொண்டாள். மகள் என்றே அவளை சொல்லலாம். தங்களோடு வந்து தங்கிவிட கெஞ்சினாள். மூன்று மாதங்கள் கழிந்திருக்கும், மூன்று யுகங்கள் போல் இருந்தது. அதற்க்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை அவருக்கு. ஒரு வாரம் தனியாய் வந்த மருமகள் திரும்பும் பொது பெட்டியோடு அவரையும் அழைத்துக் கொண்டு திரும்பினாள். மகன், மருமகள், பேரன் என்று ஒரு புது வாழ்க்கை. வீட்டுக்குள் அன்பு நிறைந்து இருந்தாலும், வீட்டுக்கு வெளியே இருந்த உலகம் கொஞ்சம் அந்நியமாய் இருந்தது. காலை வெளியில் நடக்கும் பொது எதாவது சிவப்பு நாயை பார்த்தால் செவலை கண்ணுக்குள் வந்து போனான். நாட்கள் முத்துசாமியை நகரத்துக்குள் இழுத்து கொண்டிருந்தது. பாக்கெட் பாலும், பாலிதீன் பையும் பழகி போனது.

ஒரு பொன்னான மாலையில் கையில் சக்கரை கிண்ணத்தோடு சிரித்துக் கொண்டே வந்தாள் மீனா.  இன்னொரு வரவு, புதிய உறவு அவள் வயிற்றுக்குள். அன்று பொன்னுத்தாயின் படத்திற்கு முன்னால் ரொம்ப நேரம் அமைதியாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். சந்தோசத்தை அவளோடு பகிர்ந்தே பழகியவர்.  சில மாதம் புரண்டது, மகன் சோர்வாய் வந்தான் ஒரு நாள். மீனாவின் கருப்பையில் எதோ பிரச்சனை வந்திருந்ததாய் சொன்னான். 'அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா, இப்ப இருக்க மெடிக்கல் டெவலப்மெண்ட் க்கு இதெல்லாம் ஒரு பெரிய ப்ராப்ளமே இல்ல. இவர் தான் பயப்படுறார்.' என்றாள் அவள். ஒரு புறம் பயமாய் இருந்தாலும்,உறுதியான மருமகளை பார்த்து மகனும் குடுத்து வைத்தவன் என்று சந்தோசப்  பட்டார். பிரசவ காலமும் வந்தது, ஆனால் வலி  வரவில்லை. டாக்டர்கள் ஏதேதோ சொன்னார்கள். அவர் மனம் குழம்பி  தவித்தது.குல தெய்வம் கோவில் வரை போய் வந்தால் மனதிற்கு ஆறுதலாய் இருக்கும், எல்லாம் சரி ஆகி விடும் என்று தோன்றியதும், ஊருக்கு புறப்பட்டு வந்தார்.  மருமகள் பற்றிய கவலைகளுக்கு நடுவில் பழைய நினைவுகளும் வந்து போயின.

கோவிலுக்குள் வந்து நின்றார் முத்துசாமி. 'பாண்டி சாமிஈஈ, அங்க எம்புள்ள கஷ்ட படுறது போதுண்டா அய்யா, என்ன வேணும்னாலும் என்கிட்ட இருந்து எடுத்துக்க, என்ன கஷ்டம்னாலும் எனக்கு குடுப்பா, எம் பிள்ளைங்களுக்கு நீதா கூடவே நின்னு எல்லாத்தையும் பாத்துக்கணும் சாமி'  கண்கள் நீர் சிந்த கீழே விழுந்து வணங்கினார். பொன்னுத்தாயி வழக்கமாய் கோவிலுக்கு பின்னால் இருக்கும் அம்மனை சென்று கும்பிடுவாள், அவரும் அதே பழக்கத்தில் அந்த பக்கம் சென்றார். கைபேசி குரல் கொடுத்தது,
' சொல்லுப்பா'
' அப்பா, குட் நியுஸ், ஒங்களுக்கு பேத்தி பொறந்திருக்கா'
சந்தோசத்தில் நீர் வழிந்து குரலை அடக்கியது. 'மீனா எப்டி ப்ப இருக்குது?'
'அவ ஒ.கே பா, இன்னும் கொஞ்சம் மயக்கத்துல இருக்கா. கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவாப்பா.. நாங்க காலைலேயே அட்மிட் ஆகிட்டோம். சொன்னா நீங்க கோவில் போகாம வந்துடுவீங்கன்னு தான் சொல்லல.'

'பரவா இல்லப்பா, அந்த பாண்டி கை விடல'... ;சாமிஈஈ, காப்பதிட்டயா' என்று உருகினார்.
'அப்பா...' மெதுவாய் தழு தழுத்த குரலில் 'பாப்பா, அம்மா ஜாட யா இருக்குறாப்பா' என்றான்.இதயம் நிறைந்து தொண்டையை அடைத்தது. கண்ணை முட்டி கொண்டு கண்ணீர் பெருக்கெடுத்தது.
'எந்தாயி, மறுபடியும் பொறந்து வந்திருக்காளாப்பா!!!' என்று வார்த்தைகளை முடிக்க முடியாமல் அழுகையோடு கைபேசியை அணைத்தார்.
மனது கணம் குறைந்து, ஆனால் நிறைந்திருந்தது...கை கூப்பி அம்மன் சந்நிதியில் அப்படியே கீழே விழுந்து வணங்கினார். லேசாய் ஒரு முனகல் சத்தம். சத்தம் வந்த திசையில் பஞ்சு கூட்டமாய் சின்னதாய் ஒரு சிகப்பு நாய் குட்டி. கால்கள் அனிச்சையாய் அதனருகில் சென்றது, அப்படியே எடுத்து மாரோடு அணைத்து கொண்டார். 'எஞ் செவல குட்டி, எங்க இருந்து வந்தீங்க?' என்று கொஞ்சினார்.

வாழ்க்கை விசித்திரமானது, சில சமயம் கைகளில் உள்ள அனைத்தையும் பறித்துக் கொள்கிறது, சில சமயம் அத்தனையும் மீண்டும் கொடுத்து சிரிக்கிறது.


காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...