சனி, 22 ஜூன், 2019

மாரி

"பூவில் தோன்றும் வாசம், அதுதான் ராகமோ, இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அது தான் தாளமோ", யமனின் பாசக்கயிற்றில் நரம்பெடுத்து கருவிகள் செய்தனரோ, ராஜாவின் இசை உயிரை அல்லவா சுண்டி இழுக்கிறது. ஜானகியின் குரலில் லயித்து மயங்கிக் கொண்டே வரிசையில் நின்றிருந்தேன்.  ஒவ்வொரு முறையும் இந்தியா செல்லும் பயணங்கள், முதல் முறை விமானம் ஏறிய அதே கிளர்ச்சியையே கொடுக்கிறது.

விமானம். தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது,எங்கோ தூரத்தில் கேட்கும் விமானத்தின் சத்தத்தை,நெற்றிக்கு மேல் கையை குடையாய் தூக்கி அதன் நிழலை குளிர்கண்ணாடியாய் அணிந்து, உச்சத்தில் நகரும் அந்த சொச்ச  புள்ளியை அண்ணாந்து பார்த்திருக்கும் அத்தனை பேர் விழிகளும். வாரம் ஒருமுறை வரும் ராமாயணம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட ஓட்டம் பிடித்து வெளியே வந்து விமானம் பார்த்ததுண்டு. இன்று எப்போது வேண்டுமானாலும் இராமாயணம் பார்க்கலாம்.  ஆனால் அன்றிருந்த ஆர்வம் இல்லை.  புள்ளியாய் தெரிந்த விமானத்தின் சத்தம் அன்று அதிசயமாய், இன்று உள்ளே அமர்ந்திருக்கும் போது இறைச்சலாய். எத்தனை விந்தை, விமானத்தில் ஏறுவதற்கான படிகள்  எல்லோருக்கும் ஒரே அளவில் இருப்பதில்லை. இந்திய வரைபடத்தில், குளம் கீழ் பாசி போல் எங்கும் நிறைந்திருந்தாலும், தனித்து வெளியே புலப்படாத கிராமம் ஒன்றில் பிறந்தவனுக்கு விமானத்தை நெருங்க நிறைய படிகளை கடந்து வர வேண்டியிருக்கிறது. அப்படி வருபவர் அனைவரையும் விமானம் ஒரே இலக்கிற்கு அழைத்து போவதில்லை. ஜம்பதாம் மாடியின் குளிரூட்டப்பட்ட அறையின் மூலையில் மூளை சிந்தி பிழைப்பதற்கு சிலரையும், உணவு சுமந்து செல்லும் எறும்புகள் போல வெயிலிலும் உழைக்க சிலரையும், யாரோ ஒருவரின் பசியாற்றி அவர் பிள்ளைகளை வளர்க்க தம் பிள்ளைகளை விட்டுவிட்டு போக சிலரையும், உள்ளுர் சூதாட்டம் சலித்துப் போக வெளிநாட்டு குட்டிகளும் புட்டிகளும் கொண்டு குதூகலிக்க சிலரையும், இப்படி ஒரே பயணம் ஒவ்வொருவரையும் வெவ்வேறு இடத்திற்கே கொண்டு செல்கிறது. காதில் மாட்டியிருந்த Head Phone  தாண்டி ஒலித்த குரல் வந்த திசை நோக்கி நடந்தேன்.  பாடலை நிறுத்தி விட்டு, Head Phone க்கு கொஞ்சம் விடுதலை கொடுத்தேன். இல்லை, அதனிடமிருந்து விடுதலை பெற்றேன்.  

உரக்க பேசினாலும், பெண்களின், அதிலும் நமக்கு பரிச்சயமில்லாத பெண்களின் குரல் எப்போதும் அழகாகவே இருக்கிறது.

"PassPort Please". 

இந்த வினாடியில் உலகம் உச்சரித்த ஆகச்சிறந்த கவிதை இதுதான்.  35 வயது கடந்த பின் ஏனோ தெரியவில்லை, அழகான பெண்களை பார்க்கும் போதெல்லாம் காதல் ரசம் சொட்ட தொடங்கி விடுகிறது. கையில் இருந்த பாஸ்ப்போர்ட்டை அந்த பக்கம் இருந்த பெண் விமான அலுவலரிடம் கொடுத்தேன். 

"Ticket Please"
 
விண்ணில் பறக்க வைத்து, பிறகேன் கேட்கிறாய் பணச்சீட்டு. 

"Sir Ticket Please", சற்றே உயர்த்திய குரல்.
'Ah Sorry, got lost in thoughts,, missing my family already'.
குடும்பஸ்தனாய் இருப்பதில் இது ஒரு வசதி.  நம்பினாளா தெரியாது.  சிரியதாய் புண்முறுவலோடு, "Hope its not for too long" என்று சொல்லிக் கொண்டே தலைதாழ்த்தி கணிப்பொறியின் கட்டளைக்கு விரலாடத் தொடங்கினாள். அவள் நகக்கீறல்கள் நடுவில் நர்த்தனமாடிக் கொண்டிருந்தன கீபோர்ட் விசைகள். 

இத்தனை இரவில் எத்தனை இயக்கங்கள். இரவு அமைதியானது என்பது பொதுமை. அனால் பொதுமையை கடந்த வாழ்க்கை எங்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. உறங்க வேண்டிய நேரத்தில் இதோ வழித்திருப்பவர் இருக்கின்றனர்.  அலைகள் அழகானது, படகோட்டிக்கல்ல.  பனிமலையின் பேரமைதி, அதில் வழிகாட்டி பிழைப்பவர்க்கில்லை. விசித்திரம் என்னவென்றால், பொதுமையை உண்மை என்று நம்புவர் தம்மை குழப்பிக் கொள்ளுவதில்லை.  தனிமையில் மனது ஆழமான சிந்தனைகளை சுவைத்துக் கொண்டு நடந்தது.  ஆங்காங்கே எதிர் வந்த அழகான பெண்கள் மட்டுமே சலனங்கள்.  ஆனால் அதில் எந்த வருத்தமும் இல்லை.  மாறாக சலனங்கள் கூட சில நேரம் சிந்தனைக்கு உதவுகின்றன.

Head Phone -ஐ மீண்டும் அணிந்து கொண்டேன்.  Head Phone -ஐ  தமிழில் எப்படி சொல்லலாம் என்று இது வரை ஏன் யோசிக்காமல் போனேன்?!  'தலை ஒலி பெருக்கி' என்றால் Rap song போல நரநரவென்றிருக்கும். .  கொஞ்சம் கொஞ்சலாய் ஒரு பெயர் வைக்கவேண்டும். "நயன்தாரா" எனக்கு  Ok தான், உலகம் ஒத்துக் கொள்ளாது.  "குரலி", அட அழகான பெயர், “தலைக்கு வெளியில் இருந்து இசை ஊட்டுவதால் இன்று முதல் புறக்குரலி என்ற எல்லாராலும் அன்பாய்  அழைக்கப்படுவாய்'. எனக்கு நானே சபாஷ் சொல்லிக்கொண்டு , பெயர் சூட்டிய கையோடு மனைவிக்கு அலைப்பேசி தூதனுப்பினேன்.

"ஹே கண்ணு"
..........

"செக்-இன் பண்ணிட்டேன், 20 நிமிஷத்துல கேட் போய்டுவேன்.  குட்டீஸ் தூங்கியாச்சா?"
................
"என்ன ஏம்மா மிஸ் பண்ணுதுங்க, நீயும் உம் பிள்ளைகளும் நாலு நாள் ஜாலி பண்ணுங்க."
...........................

"இல்ல பாப்பா, தூக்கம் வரல. சுத்தி இத்தனை பொண்ணுங்க,  மாமா எப்படி தூங்குவேன்?"
..........................
"ஹா ஹா. அது வேறு இது வேறு கண்மணியே"
.............................

"நீ கடல், நான் கடல் காதலன், அதனாலேயே மழைத்துளிகளையும் ரசிக்கின்றேன்."
............................
 
"ஹே நல்ல கவிதடி, இப்டி சொல்லிட்ட. சரி, போய் தூங்கு, Reach ஆகிட்டு, Message பன்றேன்."
 
சிறிது நேரம் இருவரும் sweet nothings இல் கரைந்தோம்.

"Love you , miss you... Bye கண்ணு " 

கைபேசி கண் மூடிக்கொண்டது. உள்ளே நிறைய இருக்கிறது, ஆனால் அருகில் இருக்கும் போது ஏனோ கொஞ்சுவதில்லை மனைவியை . Play list இல் இருந்து அந்த பாடல் ஆரம்பித்தது.  சில நாட்களாய் மனதை மிகவும் தொட்ட பாடல்.  பின்புற வாத்திய தொடக்கமே துள்ளலாய்  இருந்தது.

"ஒத்தையடி பாதையில் தாவி ஒடினேன்.  அத்த பெத்த பூங்குயில தேடி வாடினேன்."

முதல் முறையே கேட்டதும் மிகவும் பிடித்துப் போனது. துள்ளலான இசைத் தாண்டி அதன் ஒரு வரி என்னை ஆழமாய் தொட்டதாலேயே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன்.  பாடல் பிடித்துப் போய் காணொளியைப் பார்த்தேன்.  பார்த்ததில், உள்ளே என்றோ உறங்கிப் போன அதிர்வுகளை அலையாய் எழுப்பிவிட்டது பாடல்.  ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னால் சுற்றும் நாயகன் பார்வையில் காட்சி அமைக்க பட்டிருந்தது.  தான் உண்டு தன் வேலை உண்டு என்று வேறு எங்கும் சிதறாத பார்வையோடு, கொஞ்சம் ஆண்மை கலந்த உடல்மொழியோடு, வாரி சீவிய ஜடையோடு எந்தக் கருமமும் பூசாத இயற்கை அழகோடு நாயகி நடப்பது என் ஆழ்மனதில் புதைந்திருந்த அவளை மீண்டும் நினைவுகளின் தளத்திற்கு நெம்பி எடுத்து வந்தது.  'சந்தன மாரி' மனதின் ஆழ்துளை கிணற்றில் இருந்து எட்டிப் பார்த்தாள். உழவன் நிறம், படிய வாரிய தலைமுடி, எண்ணெய் மினுமினுப்பு, வட்டத்தின் மையத்தை மட்டுமே குறிவைக்கும் அம்பின் பார்வை, குளத்தின் நடுவில் தெரிந்தும், தெரியாமலும் தாவிக்குதிக்கும் மீன் போல் கருப்பில் சின்னதாய் ஒரு பொட்டு, அரசுப் பள்ளியின் வெள்ளை நீல சீறுடை, இதோ இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கும் விமானப்பணிப்பெண்களின் சீறுடையை விடவும் அழகு.   

“நெஞ்சுல வீசும் சந்தன வாசம்” என்ற வரி, அவளைக் கடந்து போகும் அந்த வினாடிப்பொழுது வரும் வாசணையை இந்த கணத்தின் உணர்விற்கு கொண்டு வந்தது.  அந்தப் பாடலில் வரும் நாயகன் தான் நான்.  அவள் பார்க்கிறாளோ இல்லையோ  என் பார்வையை விட்டு அவளை விலக்கியதில்லை.  120 degree பார்க்க கூடிய விழிகள் அவள் இருக்கும் போது மட்டும் 5 degree குவியத்துக்குள் சுருங்கி ஒடுங்கி விடும் ஆனாலும் ஏதேச்சையாய் அவள் திரும்பும் போது, நேர்கோட்டில் அவள் கண்கள் வரும் நொடி, கிரஹணமாய் என் கண்கள் மூடிக்கொள்ளும்.  இன்று வரை எந்த பெண்ணின் பார்வையையும் தவிர்த்ததில்லை.  என்னைப் பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் இருந்த போதும் கூட அவள் பார்க்கையில் மட்டும் அதை எதிர்கொள்ள முடியாமல் நெழிந்திருக்கிறேன். முரண்கள், காதலின் அரண்கள்.

SECURITY CHECK -ற்கு வந்து நின்றேன்.  இப்போதெல்லாம் விமான பயணங்களுக்கு உகந்த உடை வேஷ்டியும், பட்டாப்பட்டியும் தான் என்று தோன்றுகிறது.  Jacket, shoe, Belt என்று ஒவ்வொன்றையும் கலட்டுவதற்குள் உலகத் தீவிரவாதிகள் அனைவரையும், அவர்களுக்கு ஆயுதம் விற்று பிறகு உலக சமாதானம் என்று வரிந்து கட்டும் அமெரிக்காவையும் உள்ளுக்குள் அசிங்கமாய் 5 நிமிடமாவது திட்டி இருப்பேன்.  Belt கலட்டுவது ஓரளவு எளிது, அனால் மறுபடியும் சட்டையை தூக்கி, இத்தனை நேரம் மறைத்து வைத்திருந்த எனது Single Pack ஐ உலகத்திற்கு எடுத்துக் காட்டி மீண்டும் மறைத்து அந்த Belt ஐ அணிவதற்கு, வேஷ்டியை கலட்டி கழுத்தில்  போட்டுக் கொண்டு பட்டாபட்டியுடன் நடந்து விடலாம்.  பட்டாபட்டி என்று ஏளனமாய் பேசிய அனைவரும் இன்று Shorts என்று சொல்லப்படும் கோடு போடாத பட்டாபட்டிகளில் தான் அலைகின்றனர்.  உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சாஸா  மூமண்ட். 

சோதனை சாதனத்திற்குள் கைப்பையைத் தள்ளி விட்டு, Scanner கீழ் நடந்து சென்று, கைகளை அகல விரித்து,”என் உயிர் நீதானே” என்பது போல் நின்றேன்.  சோதனைக் கருவி என் மீது படர, எத்தனை மனிதரின் வாசம் பிடிக்கிறது இந்த கருவி என்று தோன்றியது. எவருடைய வியர்வை நாற்றத்திலாவது முகம் சுளித்து இருக்குமா இது. 'குளிச்சிட்டு வாங்கடா' என்று என்றாவது அது கத்தினால் எப்படி இருக்கும்! யோசனையில் சிரித்துக் கொண்டே, பரிசோதகர் சற்று நிமிர, “மாரிமுத்து” என்று பெயர் பொறிக்கப்பட்ட அவர் சட்டையைப் பார்த்தேன்.  நாம் சிந்திப்பதையே உலகம் நமக்கு தருகிறதா இல்லை நமக்கு உலகம் தருவதையே மனம் சிந்திக்கிறதா! புரியவில்லை.

நான் புறப்பட்டுவிட்டதை கைப்பேசியில் சுற்றம் மற்றும் நட்புகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, விமானம் ஏற ஆயுத்தமானேன்.  வெளியில் மெல்லியதாய் தூரிக் கொண்டிருந்தது! மழை! மாரி! உள்ளும் புறமும்.  பள்ளி நாட்களில் ஒருமுறை இப்படி ஒரு மழை இன்னும் நினைவில் இருக்கிறது.  வார நாட்களில் முழுவதும் மாரியை பார்ப்பது சுலபம், பள்ளி செல்வதால். சனி, ஞாயிறுகளில் அம்மா என்னை வெளியில் அதிகம் அனுப்பியதில்லை.  மாரியை இரண்டு நாட்கள் பார்க்கவே முடியாது.  வெள்ளிக்கிழமை மாலை, கோவிலுக்கு போய்விட்டு நண்பர்களை பார்த்து வருவதாய் சொல்லி மாரியின் வீட்டுப்பக்கம் போய்விடுவேன்.  மாரியின் அப்பா அம்மா துப்புறவு தொழிலாளர்கள்.  அவர்கள் இருந்த தெருவில் பெரும்பாலும் கூலித்தொழிலோ, துப்புறவு தொழிலோ செய்பவர்களே இருந்தனர்.  பெரும்பாலான என் நண்பர்கள் அங்கே வராமல் இருந்ததற்கான காரணம் அந்த வயதில் புரியவில்லை.  சாதி மதம் பற்றி அம்மா சொல்லிக் கொடுத்ததில்லை.  எங்கள் காட்டில் வேலை செய்த யாரையும் ஒருமையில் அழைத்ததில்லை.  இளையவரை பெயர் சொல்லியும், பெரியவரை முறை சொல்லியுமே அழைத்ததை பார்த்திருக்கிறேன். பிறக்கும் முன் கருமுட்டையும்  மரித்த பிறகு உடல் கட்டையும் எல்லாருக்கும் ஒரே இயல்பில் இருந்தாலும் இடைபட்ட காலத்தில் மனிதர் ஒரே இயல்பில் இருப்பதில்லை என்பது, இருபது வயது தாண்டிய பிறகே கண்டறிந்தேன்.  மாரி, சமுதாயம் வரைந்து வைத்த முட்டாள் கோடுகளுக்கு மிகவும் கீழே எங்கோ வசித்தவள் என்று அப்போது விளங்கவில்லை.  ஆசிரியர்கள் சிலர் பெரும்பாலும் வகுப்பறை வேலைகள் எல்லாம் மாரியிடமும் அவள் தெருவில் இருந்து வரும் செந்திலிடமுமே கொடுத்தது அப்போது ஏன் என்று புரியவில்லை.  Class Leader போல் அது ஒரு பதவி என்றே நினைத்தேன்.  சிலமுறை யாராவது வாந்தி எடுத்தால் அதில் மண்ணை கொட்டி, குப்பை கூடையில் அள்ளிக் கொட்டி சுத்தம் செய்வது கூட மாரி செய்திருக்கிறாள்.  


     அட, மாரியை பற்றிய எண்ண ஒட்டங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன.  இதோ இந்த தூரல் பார்த்ததும், நினைவில் வந்த அந்த மழை நாள் அவளை பற்றிய மற்ற நினைவுகளில் பின்னுக்கு போய்விட்டது.  அது ஒரு வெள்ளிக்கிழமை.பள்ளி நாட்களில் மட்டுமே அவளை பார்க்க முடிந்ததால், விடுமுறை நாட்கள் பிடிக்காத ஒரே மாணவன் நானாகத்தான் இருந்திருப்பேன்.  சனி, ஞாயிறுகளில் அவளை பார்ப்பது மிகவும் கடினம்.  படிப்பில் கவனம் சிதறி விடக்கூடாது என்பதில் என் அம்மா மிகவும் கவனமாக இருந்ததால் வெளிளே அதிகம் அனுமதிக்க மாட்டார்.  அவளைப் பார்க்காத வார விடுமுறைகள் கொடுமுறைகள் என்றே கழிந்தன.  வெள்ளிக்கிழமை மாலை மாரியம்மன் கோவிலுக்கு போக இருந்த அனுமதியை அவளைப் பார்க்க எடுத்துக் கொண்டேன்.  எந்த அம்மனைப் பார்த்தால் என்ன. அவள் தெருவில் வசித்த செந்திலிடம் அதற்காகவே நட்பானேன். அவன் நல்ல நண்பனாய் பின்னாளில் ஆனது தனிக்கதை. செந்திலுடன் அந்த தெருவில் சுற்றினாலும் மாரியைப் பார்ப்பது எளிதாய் இருந்ததில்லை. பெரும்பாலும் அவள் வீட்டை விட்டு வரமாட்டாள். அதிர்ஷ்டம் இருந்தால் எதற்காகவாவது வெளியே வரும் அவளை பார்க்கும் அந்த விநாடிப் பொழுதுகள் அடுத்த இரண்டு நாட்களுக்கு போதுமாய் இருந்தன.  பள்ளி சீறுடை அல்லாத அந்த பாவாடை சட்டைகளில் என் கண்ணிற்கு மாரி தேவதையாகவே தெரிந்தாள்.  
"தேவதைகள் தெருவில் நடந்தால் இப்படித்தான் இருக்கும்.அப்போது என்றோ தோன்றிய கவிதை இன்னும் நினைவிருக்கிறது.  

"உன்னைப் பெற்றதால் உன் அம்மா கூட டாவின்சி தான்" 
என்றொன்று எழுதினேன் அந்நாளில். பின்னாளில் பாரிஸில் உள்ள 'லீ லாவ்ரே' அருங்காட்சியகத்தில் மோனலிஸா ஓவியம் பார்த்த போது அந்த கவிதை ஞாபகம் வந்தது.  ஆனால் மோனலிஸா ஏன் அழகியென்று எனக்கு புரியவில்லை. எத்தனை முயன்றாலும் டாவின்சி மாரியின் அம்மா ஆகமுடியாது என்று அன்று தோன்றியது.

அவளைப் பார்ப்பதென்பது, கோவிலில் தீபஆராதணை நேரம், அது வரை சும்மா இருந்தவர்  கூட அணிச்சையாய் பரவசம் ஆனது போல் கண்ணத்தில் போட்டு கொள்வார்களே,  அது போல் பழக்கத்தில் வந்த பரவசம் அல்ல.  அபிராமிபட்டர் அம்மனை நினைவில் நிறுத்தும் போதெல்லாம் பரவச நிலையில் பித்து பிடித்தவர் போல் இருப்பாராமே, அது போல. அந்த வெள்ளிக்கிழமை மாலை மேகமூட்டமாய் இருந்தது.  'மழை வரும், அதனால் வெளியே போக வேண்டாம்' என்று அம்மா சொன்னாலும், 'பத்து நிமிஷத்துல வந்துருவேம்மா' என்று கிளம்பினேன்.  செந்திலோடு சேர்ந்து சுத்தி சுத்தி வந்தும் அன்று மாரியின் தரிசனம் கிடைக்கவில்லை.  பெரிய தூறலில் தொடங்கிய மழை வேகம் பிடித்தது.
இதற்கு மேல் அவள் வெளியே வர வாய்ப்பில்லை என்றுணர்ந்து சோகமாய் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். பாதி தூரம் வந்திருந்த போதுதான் கவனித்தேன், நிறைய வீடுகளில் பிள்ளைகள் வாசலில் நின்று மழையை பார்த்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர்.  இருட்டில் மின்னல் போல தலைக்குள் ஒரு பளிச்.  திருப்புடா சைக்கிள, சோர்ந்திருந்த முகத்தில் ஆயிரம் வாட்ஸ் இப்போது.  Hope, நம்பிக்கை நமது வேகத்தை எப்படி இரட்டிப்பாகும் என்பது அன்றைக்கு நிகழ்வு, இன்றைக்கு நினைவு. துவண்டு விழும் நேரங்களில் நம்பிக்கையே தூண்டுகோள். உலகத்தையே நனைத்து மூழ்கடித்து விட வேண்டும் என்பது போல் மழை கொட்டித் தீர்த்தது.  அடாத அந்த மழையில் எவரும் இல்லாத சாலையில் ஒருவன் மட்டும் ஒலிம்பிக் வீரன் போல் வேகமெடுத்துக் கொண்டு. சைக்கிளின் வேகத்தோடு இதயமும் சேர்ந்திருந்தது. அவளைப் பார்க்கும் அந்த ஒரு நொடியை எதிர்பார்த்து இருக்கும் அத்தனை நொடிப்பொழுதும் அதே உள்ளக்கிளர்ச்சியை தருகின்றது. மழை நீரில் கை நனைக்கும் அவளை மின்னல் வெளிச்சத்தில் பார்க்க போகின்றேன். என்னையும் அவளையும் ஒரே மழை இணைக்க போகிறது. அவள் மேல் விழும் துளியும் என் மேல் விழும் துளியும் மேலே எங்கேயோ ஒன்றோடு ஒன்று மோதி ஒன்றாய் இருந்திருக்கும். அவள் தெருவுக்குள் நுழையும் போது இதயம் இன்னும் கனமாகி இருந்தது. "மழை வருது மழை வருது குடை கொண்டு வா, மானே உன் மாராப்பிலே", இன்றும் அன்றும் அதே பாடல் உள்ளுக்குள். இருட்டுக்குள் அவள் நெற்றியின் ஒற்றை பொட்டை காண கண்கள் தவித்தன. அவள் வீடருகில் வந்து விட்டேன். கைகளும், கால்களும் மூளையின் கட்டுப்பாட்டை கடந்து விட்டிருந்தன. மழையா வியர்வையா தெரியாது, உடல் எங்கும் ஈரம். இருட்டை பிழிந்து வந்த அந்த மின்னலில், அவள் வீட்டுக்கதவு அடைபட்டிருந்தது தெரிந்தது. இப்போது பெருமழை, அதே வேகத்தில் என் விழிகளில்.

"Passengers with Infants and children please go to the boarding gate" பயணிகளை ஏற்ற தொடங்கியிருந்தனர்.  எத்தனை  மனிதர்கள் தினமும் பயணிக்கின்றனர். என்ன காரணத்திற்காக பயணித்து கொண்டே இருக்கிறார்கள் இவர்கள்? ஒரு வேளை ஆதியில் மனிதன் நாடோடியாய் அலைந்ததாலேயோ என்னவோ இன்னும் பயணப் பட்டு கொண்டே இருக்கிறான். இன்று மனிதர்கள் இலக்கை பற்றிய கவலையிலும் சிந்தனையிலும் பயணத்தை ரசிக்க தவறி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. கண்ணாடி வழியே வெளியே இருந்த இருட்டையும், நடு நடுவே ஏறியும் இறங்கியும் கொண்டிருந்த விமானங்களையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த குழந்தை என்ன எண்ணிக் கொண்டிருந்தது?  குழந்தைகள் ஒரு நாளில் 400க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்குமாம்.  அத்தனை கேள்விகளுக்கு நடுவிலும், இது இருள், இது விமானம், இது மனிதர்கள் என்று இருப்பை எந்த எதிர்ப்பும் இன்றி உள்வாங்கிக் கொண்டிருக்குமோ!  இன்னும் ஐந்து நிமிடம் கழித்து போனாலும் அதே இருக்கைதான், ஆனால் கூட்டத்தோடு முண்டியடிக்க விரும்பாத எல்லாரையும் போல் அந்த குழந்தையின் அம்மா அவளை இழுத்துக் கொண்டு நகர்ந்தார். வெளியே திரும்பி பார்த்துக் கொண்டே மனமில்லாமல் நகர்ந்தது குழந்தை. "planeல போலாமா" என்று அந்த அம்மா சந்தோசமாய் சொன்னதும், மீண்டும் உற்சாகத்தோடு அடுத்த பக்கம் திரும்பிவிட்டது குழந்தை. பிடித்தத்தையும் , கிடைக்காததையும் எவ்வளவு எளிதாய் கடந்து போய்விடுகிறார்கள் குழந்தைகள். "குழந்தை ஞானி இந்த இருவர் தவிர இங்கே சுகமாய் இருப்பவர் யார் காட்டு.",  வைரமுத்து காசுக்கு எழுதினாலும் சில உண்மைகளை சொல்லித்தான் இருக்கிறார்.  கைப்பையை தூக்கி கொண்டு நானும் நகர்ந்தேன்.

விமானம் பேரிரைச்சலுடன் பெருவெளியை நோக்கி உடலை தூக்கிக் கொண்டு பறந்தது. யாரோ ஒரு சிலரின் அறிவு, பறப்பதை சாத்தியப்படுத்தி, யாரோ ஒரு சிலரின் ஆசை, அதை மனித தேவையாக்கியிருக்கிறது.  லட்சக்கணக்கான வருடம் பறக்க முடியாமல் இருந்த மனிதன் எதை இழந்தான் என்று தெரியவில்லை.  கண்களை மூடினேன்.  மேகத்திற்கு நடுவில் மீண்டும் மாரி.  

ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை தான் மாரியை எனக்குத் தெரியும்.  நன்றாக படிப்பாள், ஒரு சில ஆசிரியர் மட்டுமே பாராட்டினர்.  எல்லா பதிலும் சொல்லுவாள்,  அதனால் பலர் அவளிடம் கேள்விகள் கேட்டதில்லை. அந்த காலத்தில் ஊரில் பெரும்பாலும் ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளிடம் சகஜமாய் பேசாமலேயே இருந்தனர்.  மாரியிடம் பெண்பிள்ளைகள் பலரே பேச மாட்டார்கள்.  மாரி 5 ரேங்க் உள்ளே வருவாள், முதலாய் வந்தது போல் நினைவில்லை.  விளையாடும் போதும் அவளை எல்லாரும் சேர்த்துக் கொண்டதில்லை.  அவளுடன் பேசவும் விளையாடவும் செந்தில் எப்போதும் இருந்தான். அனால்  தனிமையிலும் கூட அவள் மகிழ்ச்சியாக இருந்தது போலவே இருந்தது. உள்ளே எப்படி இருந்திருப்பாள் என்ற தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் மற்றவர்கள் அவளை சேர்த்திருப்பார்களா தெரியவில்லை. ஒரே வகுப்பறைக்குள் பல வகுப்புக்குள் இருந்திருக்கிறது. கண்ணுக்கு தெரியாத அந்த கோட்டிற்கு அந்த பக்கமே அவள் இருந்தாள்.  அவளை யாரும் சேர்ப்பதில்லை என்ற கருணையும், அவளின் அறிவின் மீதிருந்த மரியாதையும் நாளுக்கு நாள் அதிகமாகி என்னவென்று பெயர் சொல்லாத உணர்வாய் மாறியிருந்தது. அதையே  முதல் காதல் என்று இன்று நான் சொல்லிக் கொள்கிறேன். அவள் கைகட்டி பாடம் ஒப்புவிப்பதை ரசித்தேன், அவளது  நேரான பார்வையை பலர் திமிர் என்று சொன்னாலும் ரசித்தேன். நவாஸ் Tailor ஐ விடவும், அளவாகவே வார்த்தைகளை கத்தரித்தாள், அதையும் ரசித்தேன்.  பிடித்ததை எல்லாம் ரசிக்க தொடங்கினேன், பிறகு அவளை ரசிப்பது மட்டுமே பிடிக்க தொடங்கியிருந்தது. obsession என்று சொல்லி  டாக்டரிடம் அழைத்து செல்லும் அளவிற்கு அப்போது மக்களுக்கு அரைகுறை தெளிவு இருந்ததில்லை. அதனால் எவரும் அதை பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. முன்னவே கவிதை எழுத வரும், ஆனால் அதிகமாய் எழுத ஆரம்பித்தது அவளால் தான்.  Unconditional Love என்பதையும் அவளே கற்றுக் கொடுத்தாள். அவளை பார்க்காத போது காயப்பட்டேன். அரசல் புரசலாக நான் அவள் பின்னால் சுற்றுவது அவளுக்கு தெரிந்ததும் தெரியாதது போலவே இருப்பாள். அது கொஞ்சம் வலித்தாலும் கூட அவள் மீது அன்பு அதிகமாகியதே ஒழிய குறையவில்லை. காதல் பாடல்களே கேட்டுத் திரிந்தேன்.  கவிதைக்கென ஒரு நோட் வாங்கி கிருக்கித் தள்ளினேன். 
"இத்தனை இரவிலும் இருவர் மட்டும் விழித்து கிடக்கிறோம்.  நானும் உன் நினைவுகளும்" என்று பிதற்றினேன். ஒரு நாள் விடாது பள்ளி சென்றேன். மழையில் அழுது வீடு சேர்ந்தேனே, அந்த நாள் அன்று காய்ச்சல் வந்து விட்டது. அம்மாவிடம் சொன்னால் திங்கட்கிழமை பள்ளி செல்ல முடியாதோ என்று நினைத்து சொல்லவே இல்லை.  "அண்ணே, காச்ச மாத்திரை ஒன்னு குடுங்க" என்று மருந்தகரை மருத்துவராக்கி இருந்தேன்.  இரண்டு வருடம் எப்படி நகர்ந்தது தெரியவில்லை.  மாரியோடு திருமணம், எங்கள் மகள் அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு என்பது வரை கனவில்  கரைந்திருந்தேன்.  அப்பாவின் வேலை மாற்றம், சென்னை என்னை வாடா வெண்ணெய் என்று சொல்ல வைத்தது.  உடைந்து போனேன், என் கவிதை நோட்டுக்குள் நான் கட்டிய காதல் கோட்டை ஒரு புள்ளியாய் நொருங்கிப் போனது.  அழுதேன், வேண்டாம் என்று கதறினேன்.  அப்பாவின் கைரேகை முதுகில் ஏறியது தான் மிச்சம். செந்திலை உண்மையாய் கட்டிக்கொண்டு அழுதேன்.  நகரத்தில் நுழைந்த நான் படித்தேன், பட்டதாரி ஆனேன்.  பல இஞ்சினியர்கள் போல் வெளிநாடுகள் சென்றேன். காலம் ஓடியது. கல்லூரியில் படித்த ருக்மணியை காதலித்தேன்.  அதிசயமாய் என்னையும் ஒருத்தி திரும்ப  காதலித்தாள்.  மாங்கல்யம் சுபம் என்று வாழ்க்கை அழகாய் ஓடிக் கொண்டிருக்கிறது. பிறவிகளில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை, அனால் ஒரு வேலை பல பிறவிகள் உண்மை என்றால், ஏதோ பிறவியில் நான் செய்த பயன் ருக்மணி எனக்கு மனைவியாய் வந்தது. 

எப்போதோ அப்பா வாங்கியிருந்த ஒரு நிலம், அதை மாமாவிற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டி இத்தனை வருடங்கள் கழித்து ஊருக்கு போகின்றேன்.  மாமா கஷ்டகாலத்தில் கை கொடுத்தவர்.  அவருக்கு உதவியாய் இருக்கும் என்று அந்த நிலத்தை மாமாவையே வைத்துக் கொள்ள சொன்னார் அம்மா.  இத்தனை வருடம் மாமாவிற்கு அம்மாவின் வாக்கே போதுமானதாய் இருந்தது, ஆனால் அவர் பிள்ளைகளுக்கு இன்று பத்திரம் தேவைப்படுவதாலேயே இந்த பயணம். பரவாயில்லை. இந்த பயணத்தில் மாரியை பற்றி கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன், செந்திலைத் தேடி கண்டுபிடித்திருந்தேன்.  Face Book ஐ வெறுத்தாலும்,  பழைய நட்புகளை தேடித் கொடுத்த காரணத்தால் நன்றி சொல்வதுண்டு.  மாரி இன்னும் மாறவில்லை போலும், தானுண்டு தன வேலையுண்டு என்று இருப்பாள் போல. Face Book ம் Google ம் கூட அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. அவள்  படிப்பாளி, எங்காவது இந்நேரம் அவளும் வானத்தில் பறந்து கொண்டிருப்பாள். நான் வரும் நேரம், செந்திலும் ஊருக்கு வருவதாய் சொன்னான்.  நல்லவன், இன்னும் என் மீது அன்பாய் இருக்கிறான்.  மாரியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.   ஒரு Hello சொல்ல முடிந்தால் சிறப்பு, இல்லாவிட்டாலும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தவாவது எங்கிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரம் எனது புறக்குரலி வேறு, "ஏ கோலி சோடவே" என்று ஆரம்பித்திருந்தது.  பார்ரா, மீண்டும் மாரி, மாரி 2 என்று சிரித்துக் கொண்டே உறங்கிப் போனேன். குத்துப்பாட்டை கேட்டால் கூட பழைய காதலி நினைவில் தூக்கம் வருகிறது.

அடுத்த நாள் மதியம் வரை பாபுவுடன் சார்பதிவாளர் அலுவலகம் சுற்றித் திரிந்தேன்.  பாபு மாமா பையன். சீ, அப்படி சொன்னால் வேறு மாதிரி அர்த்தம் வருகிறது. அவன் மாமா பையன் தான், ஆனால் நான் சொல்ல வந்தது மாமாவின் பையன் என்று. மாலைக்குள் வேலை முடிந்திருந்திருந்தது. இரவு ஹோட்டலில் அறை முன்பதிவு  பண்ணியிருந்தேன். மாமா இருந்திருந்தால் வீட்டிற்கு போயிருப்பேன்.  பாபுவும் அழைக்கவில்லை.  அதுவும் நல்லதே.  காலைப்  பேருந்தில் வருவதாய் செந்தில் சொல்லியிருந்தான். ஒரு நாள் முழுவதும் அவனோடு ஊர் சுற்ற வேண்டும், ரகுபதி விலாஸில் புரோட்டா சாப்பிட வேண்டும். முடிந்தால் அவர்கள் வசித்த தெருவை போய் பார்க்க வேண்டும். காலையில் கடிகாரத்திற்கு முன்னதாகவே விழித்துக் கொண்டேன். ஆட்டோ எடுத்துக் கொண்டு செந்திலை அழைத்து வர புறப்பட்டேன். இப்போது அவன் பெரிய அரசு அதிகாரி. ஆனால் ஆள் மாறவே இல்லை. தொலைபேசியில் பேசிய போது  கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை. என்னைப் பார்க்க அவன் விடுப்பெடுத்து வரவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும்  வருகிறான். நல்ல நண்பன். முன்னவே அவனைத் தேடிப்பிடித்திருக்க வேண்டும்.பரவாயில்லை, இன்னும் வாழ்க்கை இருக்கிறது. 

என்னை அவன் பேருந்து நிலையத்தில் எதிர்பார்க்கவே இல்லை. FB இல் போட்டோ பார்த்திருந்தாலும் நேரில் வேறாய் இருந்தான். அரசு அலுவல் நண்பனின் பருமனில் தெரிந்தது. 
'டேய் மாப்ளே, எப்படி இருக்க' என்று அணைத்துக் கொண்டோம்.  முன்னதாய் இதே போல் ஓர் அணைப்பில் கலங்கிய விழி இன்றும் கொஞ்சமாய் நனைந்தது.   

'என்ன தம்பி, வேல ரொம்ப போல இருக்கு?', அவன் தொப்பையை தடவி சிரித்தேன்.  

'வந்ததும் மானத்த வாங்காதடா,இதெல்லாம் இல்லைனா மதிக்க மாட்டானுங்கடா' என்று சிரித்தான்.   

'அப்ப இன்னும் பெரிய ஆபீஸரா வளர வளர தொப்ப திண்டிவனம் போய்டும் போலயேடா',   இருவரும் கண்ணில் நீர் வர சிரித்தோம். சிறு வயது நண்பர்களுடன் அப்படியே பேச முடிகிறது. அவன் மனம் கோனுமோ என்று அதிகம் யோசிக்கத் தேவையில்லாமல் இருந்தது.  இயல்பாய் இருந்த காலத்தில் உருவான நட்பு, இயல்பாகவே இருக்கிறது.  பத்து பேர் கைகட்டி மரியாதை கொடுக்கும் ஒருவனை சரலமாய் 'போடா ங்கொண்ணியான்' என்று திட்ட முடிகிறது.  பதிவான எனது பாஸ்போர்ட் பக்கங்களோ, தினம் கையெழுத்திடும் அவனது பச்சை மையோ எங்களுக்கு இடையில் எதையும் மாற்றவில்லை.
 “Bus Stand லயே டீ குடிச்சிட்டு போலாம் மாப்ள'.  இளங்காலை, டீக்கடை பாடல், அவ்வப்போது வரும் பேருந்து சத்தம், இதோடு ஒரு டீ யாருக்கு சலிக்கும்.
'தம் அடிப்பயாடா', என்றேன்.
'இல்ல மாப்ள முன்னாடி அடிச்சேன், பையன் பொறந்த அப்புறம் நிப்பாட்டிடேன், நீ ?' என்றான்.
'College ல அடிச்சதோட சரிடா, அப்புறம் தோன்றதில்ல', நானும் ரவுடிதான்னு சொல்லி வச்சேன்.

சென்னை சென்றது, படித்தது, பட்டம் பெற்றது, பல நாடுகள் சுற்றியது, அப்பா அம்மா தவறியது என இத்தனை வருட கதைகளையும் சென்னேன்.  செந்திலும் அவன் கணக்கிற்கு , அவன் படித்த கதை,  பிறகு கல்லூரி சென்றது, அங்கு அவமானங்கள் பல கண்டது, அரசு வேலையில்  சேர்ந்தது, உயர்சாதி என்று அங்கிகரிக்கப்பட்டாலும் அதை தலைமயிர் என தூக்கி எறிந்துவிட்டு அவனுக்காக காதல் மனைவி அணு வந்தது என்று  அவன் கதையை சொல்லி முடித்த போது மணி 12 ஆகி இருந்தது.  
'Sorry மாப்ள, உன்ன முன்னவே Reach பண்ணி இருக்கணும்', உண்மையாக வருந்தினேன்.
'நானுந்தானடா தேடி இருக்கலாம். Life மாற மாற வேற வேற வேல வந்துறுதுடா, என்ன பன்றது! இப்பவாச்சும் பாத்தோமே, விடு', என்றான்.

'அது சரி மாரி எப்ட்றா இருக்கா?' என்று இழுத்தேன்.

'டேய் இப்பதான் தெரிது என்ன எதுக்கு தேடி கண்டுபுடிச்சனு, ஏண்டா இன்னமும் நான் தான் ஊறுகாயா? ' என்று வம்பளந்தான்.

'அடப்பாவி, புத்திசாலிடா நீ கண்டுபிடிச்சிட்ட, எங்க இருக்கா சொல்லு மாப்ள', என்றேன்.

'சொல்றது என்ன,  கூப்டே போறேன் வா' என்றான்.   

இத்தனை வருடம் கழித்தும் விளையாட்டாய் இதை கையாளுகிறது பால்ய நண்பனால் தான் முடியும். 'உனக்கு கல்யாணம் ஆயிருச்சு, அவளுக்கு கல்யாணம் ஆயிருச்சு, இப்ப எதுக்கு உனக்கு அவள பத்தி?' , என்று விளையாட்டாய் கூட கேக்கவில்லை. ஆனால் மாரி இன்னும் ஊரிலேயே இருப்பது ஆச்சர்யமாய் இருந்தது.

'இன்னமும் இங்கதான் இருக்காளா?' உருவம் உயர்திக் கேட்டேன்.

'ஏன்டா, இதுக்கென்ன? Singapore இல்லைனாளும் இதுவும் Town தான்'.   

'சீ, அது சொல்லல டா, அவ படிப்பாளியாச்சே, ஏதோ வெளியூர்ல இல்ல வெளிநாட்ல இருப்பானு நெனச்சேன்டா,'. உண்மையாகவே அப்படித்தான் நினைத்திருந்தேன். 

'மாப்ள, திறமை இருந்தா மட்டும் எல்லாம் மேல வந்துட முடியாது.  இன்னைக்கு இந்த இடத்துக்கு வரதுக்கு முன்னாடி, ஏன் இப்ப கூட என்ன அவமானப் படுத்துறவன் இருக்கத்தான் செய்றான்.  உனக்கு இதெல்லாம் தெரியுமானு தெரியல மாப்ள.  வா, மாரிய பாத்துட்டு வரலாம்' என்றான்.   
செந்தில் சொன்னதை கேட்டதும் எனக்கு என்னென்னவோ தோன்றியது. இதற்கு மேல் விவரம் கேட்கவும் தோன்றவில்லை. ஒருவேலை மாரியின் வாழ்க்கையில் பெரியதாய் ஏதோ நடந்திருக்குமோ என்ற பயம் வந்தது.  அவளைப் பார்க்காவிட்டால் கூட பரவாயில்லை, அவளது நினைவுகள் இன்றுவரை சுகமாய் இருக்கிறது. ஒரு வலியோடு அவள் நினைவுகள் எனக்குள் இருக்க வேண்டாம். பேசாமல் கிளம்பி விடலாம் என்று யோசித்தேன்.

'மாப்ள அவள கண்டிப்பா பாக்கனும்னா இல்லடா, நல்லா இருக்காளான்னு தெரிஞ்சுகிட்டா போதும் அதான் கேட்டேன்',  

'டேய், அது நல்லா தான் இருக்கு', என் முகத்தில் இருந்த கவலையை பார்த்து புரிந்து கொண்டவனாய், 'மாப்ள, மாரி ஒரு fighterடா,அத அப்படியெல்லாம் இந்த வாழ்க பொரட்டி போட முடியாது, வாடா', நம்பிக்கையாய் சொன்னான்.

Auto பிடித்து Holy Angel School க்கு போக சொல்லி ஓட்டுனரிடம் கேட்டுக்கொண்டான். School Teacher ஆகிட்டாளோ என்று யோசித்தேன்.  எதுவாய் இருந்தாலும் நேரில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். நன்றாய்  தானே இருக்கிறாள் என்ற தைரியத்தில் எதுவும் கேக்காமலேயே செந்திலுடன் போனேன்.

'ஏன்டா, Class நடக்கும் போது வெளில வர முடியுமா' என்றேன் அப்பாவியாய். 

'டேய் அது Office ல வேல பாக்குதுடா. Teacher இல்ல'.  ஒரு சிறிய நொடி இடைவெளிக்கு பிறகு அவனே தொடர்ந்தான்.  'நல்லா படிச்சிட்டிருந்த பொண்ணுடா, நீ எட்டாவதுல சென்னை போயிட்ட, உனக்கு தெரிஞ்சிருக்காது, 9ஆம் Class படிக்கும் போது அவுங்க அப்பா தவறிட்டாரு.' பெரிய உணர்ச்சி ஏதும் இல்லாமல் சொல்லினான்.

'எப்படிடா அவ்ளோ சின்ன வயசிலேயே? அவருக்கு ஏதோ வியாதியாடா?', பழைய செய்தி ஆனாலும் எனக்கு புதிதென்பதால் இன்று நடந்தது போலவே பதறினேன்.

'ஊரோட சுகாதாரத்துக்கு வேல பாக்குறவனுக்கு, அவன் உடம்புல என்ன வந்தாலும் பாத்துக்க முடியாதுடா, அதான் உண்மை.  தோட்டி னு சொல்லி எல்லாரும் தள்ளி வச்சுதான் பாப்பாங்க. சின்ன பிள்ளைங்க வெளில போனா கூட அம்மா தான் மொகம் சுளிக்காம கழுவி விடுவாங்க. ஊரே போற அசிங்கத்த முகம் சுளிக்காம Clean பண்ணுறவன், பாக்குற எல்லாருக்கும் தோட்டி தான். Machine அ வச்சு செய்ய வேணாம், கொறஞ்சது கைக்கு ஒரு gloves,  காலுக்கு ஒரு Shoe, பாதுகாப்பா ஒரு  Dress உண்டா சொல்லு?' அவன் கண்களில் கோபம் தெரிந்தது. ஒரு அரசு ஊழியனாய் இருந்தும் இதற்க்கு எதுவும் செய்ய முடியாத ஆற்றாமை அவன் சொற்களில் தெரிந்தது.

எனக்கும் உள்ளுக்குள் சுருக்கென்றது. வளர்ந்த நாடுகள் பல சுற்றி இருக்கிறேன்.  தெரு கூட்டும் வேலையை இயந்திரங்களே செய்கின்றன.  மிச்சம் மீதி சுகாதார வேலை செய்பவர்கள், அதற்கு தேவைப்படுகிற ஆடைகளும் கவசங்களும் அணிந்தே வேலை செய்கின்றனர்.  எல்லாருடைய உயிரும் ஒரே போல தான், அல்லது கிட்டதட்ட ஒரே போல் தான் அந்தந்த அரசாங்கத்தால் பார்க்கப் படுகிறது. வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு கையுறைகள் கிடைக்கின்ற காலத்தில் பொது கழிப்பறை சுத்தம் செய்பவர் வெறும் கையுடனும், அணியில்லாத கால்களுடனேயுமே வேலை பார்க்கின்றனர்.  பெறும்பாலான சுகாதார வேலை ஒரு சாதியினரே பார்ப்பதும், அந்த வேலைக்குரிய பாதுகாப்பை அரசாங்கமோ பொதுமக்களோ பெரியதாய் எடுத்துக் கொள்ளாததும் எதேச்சையான நிகழ்வாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

'அப்பா செத்ததும், ஒரு வருமானம் போச்சே!, அவுங்க அம்மா ஆயாவா வேல பாத்த School Teacher ஒருத்தவுங்க வீட்ல வேலைக்கு போக ஆரம்பிச்சுடுச்சு மாரி, தம்பி தங்கச்சிய பாக்கனுமே.'
ஒரு குழந்தை பசிக்காக புத்தகத்தை வைத்து விட்டு, பாத்திரத்தை எடுப்பது எத்தனை பெரிய வன்முறை. எவ்வளவு வேதனை கொடுத்திருக்கும், அதுவும் மாரி படிப்பில் ஆர்வம் உள்ள பெண்.

'குடும்ப கஷ்டம்! மாமா மகன் மருந்தடிக்கிற வேல, அரசாங்க வேலைன்னு சீக்கிரமே கட்டிக் குடுத்துட்டாங்க. மாரி விடாம Private ஆ அதுவே படிச்சு +2 வரைக்கும் பரிட்ச எழுதுச்சு.  அது புருஷன் நல்ல பய. மாரி படிக்கிற புள்ள, நல்லா படிக்கனும்னு ஆசப்படுறவன்.ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது.  மாரி பெரிய Officer அ கல்யாணம் பண்ணல ஆனா நல்லவன தான் கல்யாணம் பண்ணிருக்கு.', அந்த அளவில் சந்தோஷப்பட்டேன்.  பாரதிகள் பிராமண குடும்பத்தில் தான் பிறக்க வேண்டும் என்பதில்லை. 

'அப்புறம் கொழந்த பொறந்ததும் அத பாத்துகிட்டு வீட்லயே இருந்துச்சு.  +2 படிச்சதுக்கு ஆயா வேல தான் கெடச்சுச்சு. ஆனா மாரி விடல, கொஞ்ச வருஷம் கழிச்சு அப்படியே ஒரு டிகிரி ஒன்னு படிக்க ஆரம்பிச்சுச்சு. நல்லா எல்லாம் போதுன்னு நெனைக்குறதுக்குல்ல, கடங்காரன் ஒருத்தன் அவ புருஷன் மேல accident பண்ணிட்டான்.  உசுருக்கு ஒன்னும் இல்ல, ஆனா நடபோச்சு, Wheel Chair ல ஒக்கார வச்சுருச்சு'. என் கண்ணத்தில் சின்னதாய் எழுந்த ஈரக்கோட்டை நான் கவனிக்கவில்லை.  

'மாப்ள ஏண்டா கலங்குர?' என்றதும் துடைத்துக் கொண்டேன்.  உள்ளுக்குள் நெஞ்சை அடைத்து கொண்டு வந்தது.  வலி மட்டுமே பார்த்து வளர்ந்த மாரி ஒரு பக்கம், எந்த கஷ்டமுமே இல்லாமல் உலகம் சுற்றிக் கொண்டிருக்கும் நான் இன்னொரு பக்கம். வாழ்க்கை மீது கோபம் வந்தது, எரிச்சல் வந்தது.  அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.  அப்படியே எதுவம் பண்ணாமல் போக என்னால் முடியாது.

'மாப்ள, இப்ப அவளுக்கு ஏதாவது உதவி..?' இழுத்தேன்.   

நான் சொல்ல வந்தததை புரிந்து கொண்டவனாய், 'டேய், நீ பணம்னு சொன்னா வாங்குற ஆள் கிடையாது மாரி. நான் எத்தன  தடவ கேட்டிருப்பேன்.  வேலைக்கு ஏதாச்சும் ஒதவி முடிஞ்சா பண்ணு செந்திலு, காசெல்லாம் கொடுத்து அசிங்கபடித்திடாதன்னு சொல்லிடும்'. மாரியின் பார்வை இத்தனை புயலுக்கு பின்னும் வளையாமல் நேராகவே இருக்கிறது, இரும்பு தூண் மாதிரி.

'அப்பத்தான் இந்த Church ஆளுங்க கிட்ட போய் நின்னுச்சு. எல்லாரும் ஆயா வேல மட்டும் தந்தப்ப, இவுங்க தான் Office வேல குடுத்தாங்க. ஆனா ரெண்டு வருஷத்துல கண்டிப்பா டிகிரி முடிச்சிறனும்னு  சொன்னாங்க. மாரி யாரு, அவுங்க சொன்ன மாதிரியே படிச்சுச்சு. அதோட கொணத்தையும் நேர்மையையும் பாத்து, அதோட வீட்டுக்காரருக்கும்  messenger வேல போட்டு கொடுத்துட்டாங்க. அதுவும் Degree முடிச்சிருச்சு, இப்ப அடுத்து Masters படிச்சிட்டு இருக்கு, இந்த வருஷம் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.'

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் தான், ஆனால் கூட சில நேரங்களில் மதங்களும் வழிப்பாட்டுத் தளங்களும் இருப்பதால் தவறில்லை என்று தோன்றுகிறது.  இதோ மாரிக்கு வேலைக் கொடுத்த இந்த church போல, 

'அப்புறம் மாப்ள, இப்ப அது மாரி இல்ல, மேரி. School ல அப்படிக் கேட்டாதான் தெரியும்', என்றான்.

'மதம் மாரிட்டாளா?', எதற்கு அதிர்ந்தேன் தெரியவில்லை.

'பசின்னு வந்தா மனுஷனே மாறுறான்.  மதம் தாணடா, என்ன இப்போ?',  என்றான் அலட்டிக் கொள்ளாமல்.
என்றோ மதமாற்றத்தை எதிர்த்து ஒரு NRI நண்பன் உணர்ச்சி வசப்பட்டு பேசியது  நினைவுக்கு வந்தது.  “கர் வாப்ஸி” பற்றி எல்லாம் கண்கள் நெருப்பாய் எரிய பேசினான். ஒருவனது வறுமையை பயன்படுத்தி மதம் பரப்புவது தவறென்று வாதிடலாம். அதில் ஆழ்ந்த உண்மை கூட இருக்கலாம். ஆனால் காயம் பட்ட மனிதனுக்கு மருந்தும் அளிக்காமல், அவனை புறம் தள்ளியும் வைத்து விட்டு, அவன் வேறு எங்கோ வைத்தியம்பார்த்துக் கொள்ளும் போது அவன் காயம் சுற்றிய கட்டுகளில் நெருப்பு வைப்பது எந்த விதத்திலும் நியாயமாய் தெரியவில்லை.  மனிதர்கள் நெஞ்சுக்குள் சுமக்கும் சிலுவைகளை கலைவது பற்றி கவலை படாத சமுதாயம் அதே சிலுவை அவர்கள் நெஞ்சுக்கு வெளியில் அணியும் போது மட்டும் கொதித்தெழுகின்றது. என் சந்தன மாரி போராளி, வாழ்க்கையை ஜெயித்து விடுவாள். ஆனால் சாக்கடை வாசத்தில் எத்தனை சந்தன மாரிகள் வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கின்றனரோ!      

ஒரு நாள் உலகம் நீதிப் பெறும், திருநாள் நிகழும் தேதி வரும்', ஆட்டோவில் பாடல் கசித்து கொண்டிருந்தது.....
                                               

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...