சனி, 14 செப்டம்பர், 2013

'ஆனந்த யாழ்' பாடல் எனது வரிகளில்

தங்க மீன்கள் திரைக்காவியத்தில் வரும்  'ஆனந்த யாழ்' மெட்டில் மனம் சுற்றிக் கொண்டே இருந்தது. நானும் பெண்ணை பெற்ற அப்பனானதால் அந்த மெட்டிற்கு ஒரு பாட்டெழுத தோன்றியது. முயற்சி செய்திருக்கிறேன்.

வானவில் தேரில் ஏற்றுகிறாய்,
எந்தன் வானத்தில் பேரொளி ஊற்றுகிறாய்.
காற்றினில் ஈரம் கூட்டுகிறாய்,
எந்தன் கால்களில் சிறகை பூட்டுகிறாய்.
ஒரு பாலை மணலில் பூக்களை நிரப்பி,
சோலைகள் பரப்பிய சாரலும் நீ.
எந்தன் ஆயுள் முழுக்க கண்ணுக்குள் சுமப்பேன்,
அன்னையுமாக்கினாய் என்னையே நீ.
இந்த பூமியில் எதுவும் தேவை இல்லை,
நம் கூட்டுக்குள்ளே  வரும் சொர்க்கமடி.
நம் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வம் எல்லாம்,
தினம் புன்னகையாலே தந்திடு நீ.

கண்களில் தெரியும் தென்றலடி,
என் கைகளில் கிடைத்த திங்களடி ,
வண்ணத்து பூச்சியின் வண்ணமடி,
வெண்பனி உந்தன் கன்னமடி.
தினம் பார்வைக்குள் புதைத்து, பாதங்கள் பதித்து,
மோட்சங்கள் கொடுக்கும் தெய்வமடி.
உன் தாமரை விழியின் தாள் திறக்க பல சூரியன்கள் தினம் பூக்குமடி.

                                                                      (வானவில் தேரில்...)

மேகத்தின் மேலொரு வீடு கட்டி,
ஆடிடலாம் நாம் கண்ணை பொத்தி,
புள்ளினம் போலே இறக்கை கட்டி ,
போய் வரலாம் நாம் விண்ணை முட்டி.
எந்தன் பூமகள் தேகம் நோவெடுத்தால் நான்,
ஊஞ்சலாய் சுமப்பேன் கையை கட்டி.
உந்தன் பொன்விழி தூக்கம் கண்டுவிட்டால்,
நான் மெத்தை செய்வேன் என் தோள்கள் தட்டி.

                                                                  (வானவில் தேரில்...)


வியாழன், 12 செப்டம்பர், 2013

V2 (Part 4/ பாகம் நான்கு - இறுதிப் பாகம் )

தூக்கம் கலையத் தொடங்கியது. ஆனால் கண்களைத் திறக்க தோன்ற வில்லை. விழித்த பின்பும் எத்தனை நேரம் கண்களை மூடியே இருப்பது. இத்தனை நேரம் சுகமாய் இருந்தது இப்போது சுமையாய்த் தெரிந்தது. மெல்ல கண்களை திறந்தேன். திறந்ததும் சிறிது அதிர்ந்து விட்டேன். நேற்று பார்த்த அந்த விகாரனைப் போல் இன்னொருவன், இன்னும் கொஞ்சம் பெரியதாய். "வணக்கம் நண்பரே!". ஆரம்பித்து விட்டார்கள் நல்லவர்கள். வணக்கம் சொல்லும் மன நிலையில் நான் இல்லை. இவர்களை சண்டை இட்டும் ஜெயிக்க முடியாது, அடங்கி போவதை விட வேறு வழியும் இல்லை. அந்த மாமிச மலை தொடர்ந்தது. "நண்பரே, உங்கள் குழப்பங்களை நானறிவேன். எங்களை மண்ணிக்க வேண்டும். நாம் எல்லாம் காலத்தின் கருவிகள். சரி, தவறு என்பதில் நமக்கு இருக்கும் முரண் தான் பல சமயம் நம் வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகின்றன." நான் தத்துவம் கேட்கும் நிலையில் இல்லை, கேட்காமல் இருக்கும் இடத்திலும் இல்லை.

அவன் தொடர்ந்தான்."உங்கள் மனதுக்குள் நிறைய கேள்விகள் இருக்கும். என்னால் இயன்ற அளவு அதற்க்கான பதிலை கூறுகிறேன். பொறுமையாய் கேளுங்கள். நாங்கள் உங்கள் கிரஹத்தை கண்டு பிடித்தது உங்கள் மனிதர்களால் தான். அவர்கள் வேற்று கிரஹ ஆராய்ச்சிக்காக பல அலைவரிசையில் விண்வெளி நோக்கி செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அப்படி ஒரு ஆராய்ச்சியில் இருந்தோம். ஆனால் உங்களை விட நாங்கள் அறிவியலில் பல மடங்கு முன்னால் இருக்கிறோம். எங்களுடைய சக்தி வாய்ந்த கருவிகள் வெகு தூரத்திலேயே உங்களுடைய அலை வரிசைகளை கண்டு கொண்டது. உங்கள் கணக்குப் படி சுமார் 50 ஆண்டுகள் முன்னால் எங்கள் கிரஹவாசிகள் ஒரு குழுவோடு அங்கே வந்து சேர்ந்தனர். அன்று முதல் அங்கே பல விதமான ஆராய்சிகள் செய்து வருகிறோம்.  எங்கள் ஆராய்ச்சியும், ஆரம்பத்தில் நாங்கள் அறிந்து கொண்ட விஷயங்களே இத்தனை ஆண்டுகளாக உங்கள் இடத்தில் எங்கள் தேடல்கள் தொடர காரணம். நம் இருவரின் கிரஹங்களும் அதிசயிக்கும் வண்ணம் பல ஒற்றுமைகளை கொண்டது. இரண்டு இடத்தில் வாழும் உயிர்களுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. தாவரங்கள், நகரும் உயிர்வகைகள் , அவைகள் சுவாசிக்கும் விதம், ஏன், அவைகளின் செல்களின் மூலக் கூறுகள் கூட கிட்டத்தட்ட ஒன்று தான். ஆக்சிஜன், ஹைட்ரஜன், கார்பன், நீர் என்று நமது உயிரின் அடிப்படைகள் ஒரே மாதிரியானவை. இரண்டு கிரஹத்தின் பருவ மாற்றங்கள், இரவு பகல், காற்று மண்டலங்கள்  கூட ஒத்தே இருக்கிறது. இது அதிசய ஒற்றுமை. ஆனால், எங்களுக்கு மிகவும் தேவைப்பட்ட ஒற்றுமை. "

எனக்கு புரிந்தது போலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது. இவனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமையும் எனக்கு தெரியவில்லை. நான் அவனை குழப்பமாய் பார்த்தேன். அவனுக்கு நான் நினைத்தது என்ன புரிய போகிறது என்று நினைக்கையில் அவன் மீண்டும் பேசத் தொடங்கினான்.       "நண்பரே, நமக்குள் இருக்கும் வேற்றுமை பற்றி நீங்கள் நினைக்கலாம்.  ஆனால் அதெல்லாம் நாம் வாழும் இடங்களுக்குள் இருக்கும் சிறிய வேற்றுமைகளே. உங்கள் கிரஹத்தின் புவி ஈர்ப்பு எங்களுடையதை விட அதிகம், எங்கள் ஆய்வின் படி நமக்குள் உள்ள உயர வேறுபாட்டிற்கு அதுதான் முக்கிய காரணம். இந்த விண்கலத்தில் இந்த அறை மட்டும் உங்கள் கிரஹம் போல் இருப்பதற்காக செயற்கை ஈர்ப்பு விசை அமைத்துள்ளோம்.  நாம் இருவரும் ஆக்சிஜன் தான் சுவாசிக்கிறோம், ஆனால் எங்கள் கிரஹத்தில் கார்பன் டை ஆக்சைட்  மிகவும் அதிகம். அதனால் நாங்கள் எங்களை செயற்கையாய் மாற்றிக் கொண்டதே இந்த பச்சை நிற உடம்பு. எங்கள் தோல் தாவரங்கள் போல் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு அதிலிருந்து எங்களுக்கு வேண்டிய ஆக்சிஜனை  உற்பத்தி செய்து விடும். எங்கள் நாசிகளை  அதிகமாய் நாங்கள் பயன்படுத்துவது கிடையாது. உங்கள் கிரஹத்தில் ஆக்சிஜன் நிறைய இருப்பதால் நீங்கள் இயல்பாக நாசிகளில் சுவாசிக்கிறீர்கள்.  எங்கள் கிரஹத்தில் கதிர் வீச்சு அதிகம், அதனால் எங்கள் தோல் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் கடினமாய் இருக்கிறது. நீங்கள் எங்கள் கிரஹத்தில் மாற்று உடை அணிய வேண்டி இருக்கும். உங்களுக்கு தரை இறங்கியதும் அதை தருகிறோம்."

எனக்கு எல்லாம் ஒரு கதை போல் இருந்தது. அவன் சொன்ன ஒற்றுமைகள் எனக்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இப்போது என்னை வைத்து இவர்கள் என்ன செய்ய போகிறார்கள், இத்தனை நாளாய் என்ன செய்தார்கள் என்ற அச்சம் கண்களில் தெரிந்தது. நான் கேட்டு விட எத்தனித்தேன். 'இப்போது உங்களுக்கு நான் எதற்கு?' என்று தடுமாறிக் கொண்டே கேட்டு விட்டேன். அந்த பூதப் பாண்டியன் பொறுமையாய் பேசத் தொடங்கினான். " நண்பரே, நமக்குள் நிறைய ஒற்றுமை உண்டென்பதை சொன்னேனே. அதுதான் காரணம். உங்கள் உடலை சோதனை செய்து நாங்கள் உங்கள் கிரஹத்தில் வாழ முடியுமா என்று ஆராய்ச்சி செய்கிறோம்". எனக்கு தூக்கி வாரி போட்டது. இவர்கள் நமது கிரஹத்தை எடுத்துக் கொள்ள போகும் முயற்சி இது. அவன் தொடர்ந்தான். "நீங்கள் அஞ்ச வேண்டாம். உண்மையில் நாங்கள் உங்களோடு சேர்ந்தே வாழ முடியுமா என்பதே ஆராய்ந்துக் கொண்டு இருக்கிறோம். உங்கள் உயிரணுவோடு எங்கள் உயிரணுவை சேர்க்க கூட பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் கிரஹத்தில் எதையும் அழிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை." . இப்போது உண்மையிலேயே மிகவும் கனிவாய் பேசினான் அவன். "ஒரு விஷயம் சொன்னால் உங்களுக்கு இன்னும் தெளிவாய் புரியும். உங்கள் இனத்தோடு எங்களுக்கு இருக்கும் ஒற்றுமையை அறிந்ததில், நாங்கள் எங்கள் பழைய கோப்புகளை ஆராய்ந்தோம். சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எங்கள் இனம் இன்று நீங்கள் இருப்பது போலவே இருந்திருக்கிறோம். உலகத்தை தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வருவதாக நினைத்த எங்கள் முன்னோர்கள் இயற்க்கைக்கு புறம்பாய் சென்றதில் கிட்டத்தட்ட அழிந்து போனார்கள். எஞ்சிய சிலர் அறிவின் துணை கொண்டு எப்படியோ வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எங்கள் உலகம் இன்னும் சில நூறு வருடங்களுக்கு மேல் உயிர் வாழ ஒத்துழைக்காது. அதனால் தான் புதிய வீடு தேடி உங்களை ஆராய்ந்து வருகிறோம். எங்கள் இணம் கற்றுக் கொண்ட  பாடங்கள் இனி எங்களை  இயற்க்கைக்கு எதிராய் எதையும் அழிக்க விடாது". அந்த உருவம் கொஞ்சம் உருக்கமாய் நடந்து ஜன்னலின் விசையை கீழே அழுத்தியது. ஜன்னல் வழியாக கொஞ்சம் தூரத்தில் சிகப்பு நிறத்தில் ஒரு கிரஹம் தெரிந்தது. "நண்பரே, அதோ தெரிகிறதே, அதுதான் எங்கள் கிரஹம். பூமி என்று அதனை அழைப்போம். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்க பட்ட இணத்தின் தொடர்ச்சி நாங்கள், க்லோரோ  சேப்பியன்ஸ்".

சிகப்பு பூமி சத்தமின்றி எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தது.

                                                                                                                                          முற்றும்

திங்கள், 9 செப்டம்பர், 2013

கூர் பார்வையாள்

நாவின்றி,
பாவின்றி,
மொழியின்றி
ஒலியின்றி,
பாடல் கேட்டேன்
உன் பார்வையிலே

நீ,
வெட்டிப் போட்ட நகத்தின் பிறைகள்,
கட்டி எறிந்த சாக்லேட் உறைகள்,
எட்டிக் கிழித்த இலையின் குறைகள்,
இத்தனை பொறுக்கியவர் பலரின் நடுவில்,
உன் பார்வை மட்டும் சேகரிப்பவன் நான்.

நிகரென்று நின்றாலே,
புவி ஈர்ப்பும் தோற்று போகுமே
தவிப்போடு நிலவும் தேயுமே,
கவி தேடி மொழியும் ஏங்குமே,
அவிக்கின்ற கதிரும் காயுமே,

மறுப்போடு தவிர்த்தாலும்,
வெறுப்போடு எரித்தாலும்,
உயிர் தைக்கும் வித்தையாலே,
என் உளம் தொட்ட பார்வையாளே !!!

திங்கள், 2 செப்டம்பர், 2013

V2 ( Part 3 / பாகம் மூன்று )

நிஜமாகவே நடப்பது போல் கனவுகள் வருமே! இது அப்படி ஒன்றாக இருக்க வேண்டும். நான் கண்களை திறக்கும் போது எனது அறையில் , பியா வின் அருகில் இருக்க போகிறேன். தைரியம் நிறைய வரவழைத்து கண்களை திறந்து பார்த்தேன். இதயத்தின் ஓலங்கள் எல்லாம் தொண்டையில் வந்து அடைத்தன. நான் அதே விசித்திர அறையில் தான் இருக்கிறேன். அப்படியென்றால் நான் மயங்கியது, அதற்க்கு முன்னால் கேட்டது எல்லாமே நிஜம். ஒரு வேளை என்னோடு யாரவது விளையாடுகிறார்களோ? ரே யின் வேலையாய் கூட இருக்கலாம். ஆனால் என் உடல் உண்மையில் அல்லவா இளைத்திருக்கிறது. ஒரே நாளில் அதற்கு வாய்ப்பில்லையே. நான் நாள் கணக்கில் தான்  இங்கே இருந்திருக்க வேண்டும். மீண்டும் அந்த எரிச்சலூட்டும் குரல். நான் விழிப்பதை எப்படி தெரிந்து கொள்கிறாளோ சதிகாரி. " நண்பரே, நலமாக உள்ளீர்களா? ". இப்போது அவளை கொல்ல வேண்டும் போல் இருந்தது. 'என்னை கொடுமைப் படுத்தாதீர்கள். என்னோடு விளையாட இது நேரமில்லை. நான் வீட்டிற்கு செல்ல வேண்டும். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்.' என்னை அறியாமல் நான் அழுதிருந்தேன். "நண்பரே, மறுபடியும் மண்ணியுங்கள். நீங்கள் வீட்டிலிருந்து நினைத்து பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறீர்கள். உங்களை தொந்தரவு செய்வதற்கு மண்ணிக்கவும். உங்களை உங்கள் வீட்டில் மறுபடியும் விட்டு விடுவோம். நம்புங்கள். ஆனால் , உடனே அதை செய்ய முடியாது. அது வரை உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு வேண்டும்.".  குழப்பங்கள் அதிகமானாலும், மறுபடியும் வீட்டிற்கு போக முடியும் என்பது கொஞ்சம் நம்பிக்கையை தந்தது.


இப்போது நான் குழம்பிக் கொண்டிருந்தால் திரும்பிப் போவதை பற்றி யோசிக்க முடியாது. முதலில் நான் நிதானம் அடைய வேண்டும். பொறுமையாக இருந்தால் தான் உண்மைகள் அனைத்தும் அறிய முடியும். எதுவானாலும் அதை உண்மை இல்லை என்று மறுப்பதில் புண்ணியம் இல்லை. உண்மையை ஏற்று கொள்ளுவது தான் இப்போதைக்கு எனக்கான முதல் உதவி. கொஞ்சம் உறுதியோடு 'நீங்கள் சொல்லும் எதுவும் என்னால் நம்ப முடியவில்லை. இப்போது நான் எங்கிருக்கிறேன்? நீங்கள் யார்? நான் உங்களை பார்க்க வேண்டும்' என்று சொன்னேன். அந்த குரல் வழக்கமான பொறுமையுடன் "நீங்கள் எங்களைப் பார்க்கத்தான் போகிறீர்கள். இப்போது நான் சொல்வதை நம்பிக்கையோடு கவனமாய் கேளுங்கள். நாம் இப்போது இருப்பது ஒரு விண்வெளி விமானத்தில். நாம் ஒருவருக்கொருவர் வேற்று கிரஹவாசிகள் . உங்கள் கிரஹத்தில் இருந்து கிளம்பி உங்களின் கணக்குப்படி 260 நாட்களும், எங்களுடைய கணக்கின்படி 420 நாட்களும் ஆகின்றன. எங்களுடைய 2 நாட்களில், நாம் எங்களுடைய கிரஹத்தை அடைந்து விடுவோம். சில பரிசோதனைகளுக்காக தான் நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள். அதற்க்கு உதவும் பொருட்டே உங்களை மயக்கத்தில் வைத்திருந்தோம்.  நாங்கள் எங்கள் கிரஹத்தை அடையும் போது நீங்கள் விழித்து இருப்பது எங்கள் பரிசோதனைகளில் ஒன்று. அதற்காகவே இப்போது நீங்கள் மயக்கத்தில் இல்லை. எங்கள் குழுவின் தலைவர் உங்களை பார்க்க இன்னும் சில நேரத்தில் வர வேண்டும்.  அவரிடம் உங்களுடைய கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள். இப்போதைக்கு நீங்கள் என்னை நம்ப வேண்டுமென்றால், உங்கள் படுக்கைக்கு நேர் எதிரில் உள்ள அந்த விசையை கீழ் நோக்கி திருப்புங்கள். ஜன்னல் திறக்கும். ஆனால் அதனால் அண்ட வெளியின்  கதிர் வீச்சு அபாயம் அதிகமாகும். ஜன்னல் கொஞ்ச நேரத்தில் தானாக மூடிக்கொள்ளும். இருந்தாலும் அங்கே ரொம்ப நேரம் நிற்க வேண்டாம். ". மந்திரம் போல் அனைத்தையும் கொட்டிவிட்டு நின்றுவிட்டது அந்தக் குரல். 

நான் இருப்பது வேறு ஒரு உலகத்தில் என்பதை நம்ப மறுக்கும் மனதிற்கு புரிய வைக்க முயற்சி செய்தேன். உண்மையை மறுப்பதில் பொய்யான சந்தோஷம் கிடைக்கலாம், நிலையான அமைதி கிடைக்காது. அவள் சொன்ன அந்த விசையை நோக்கி நடந்தேன். மெல்ல அதைத் திருப்ப முயற்சி செய்தேன். என் கைகளின் வலு எங்கே போனது? விசையை திருப்புவது மிகவும் சிரமமாக இருந்தது. உடலின் மொத்த வலுவும் தேவைப் பட்டது. விசை கீழிறங்கி, ஒரு திரை விலகுவது போல் அங்கே இருந்த சுவர் திறந்தது. கண்ணாடி வழியாக நான் பார்த்தது மிகப் பெரிய மாயை. எங்கும் திறந்த வெளி. கோடிக்கணக்கில் ஒளிக் கற்றைகள். கனவுலகம் என்று சொல்லுவார்களே. இதுவாகத்தான் இருக்க வேண்டும். இத்தனை குழப்பத்திலும் இந்த பிரமாண்டம் என் மனதில் இனம் புரியாத ஒரு அமைதியைத் தந்தது. அதற்குள் மேலே இருந்த விளக்கு மின்னத்தொடங்கியதும், ஜன்னல் மூடிக் கொண்டது. ஒன்று நிச்சயம். நான் வேறு கிரஹ மனிதர்களோடு எங்கோ போய் கொண்டிருக்கிறேன். இப்போது, என் வீட்டிற்கு செல்வதை விட, உயிரோடு இருப்பதே முக்கியமாய் பட்டது. ஏனோ பியாவும் என் காதலியும் இப்போது தூரத்துப் புள்ளியாய் ஆனார்கள். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த நேரத்தில் எனது முதல் குறிக்கோள். ஆழமாய் ஆனால் வெறுமையாய் யோசித்துக் கொண்டிருக்கையில் சதிகாரி மீண்டும் அழைத்தாள்."நண்பரே, உங்கள் குழப்பங்கள் கொஞ்சம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். ". அவள் இப்போது ஆட்டி வைக்கும்இடத்திலும் நான் ஆடும் இடத்திலும் இருக்கிறோம். அவள் அதிகாரமாய் சொல்வதைக் கூட நான் அன்பாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய பதிலுக்கு காத்திருக்காமல் அவள் தொடர்ந்தாள்.  "உங்கள் உடம்பிற்கு வேண்டிய உணவினை மருந்து வடிவில் கொடுத்திட எங்கள் விஞ்ஞானி ஒருவர் வருவார். தயவு செய்து ஒத்துழையுங்கள்.". அடிப் பாவி, தயவு செய்தா! எனக்கு வேறு வழி என்ன உள்ளது. நான் உயிரோடு இருப்பதற்காக தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்ற எண்ணம் விசித்திரமாய் இருந்தது. அப்போது ஒரு பக்க சுவற்றில் இருந்து பிளவொன்று தோன்றியது.  இந்த அறையின் கதவுகள் எல்லாமே சுவர் போலவே அமைத்திருக்கிறார்கள் 'நண்பர்கள்'. 

மிகவும் உயரமான ஒரு உருவம் உள்ளே வந்தது. அதைப் பார்த்ததும் அனிச்சையாய் பயம் தொற்றிக் கொண்டது. இதற்கும் தலை, உடல், கால் அமைப்பே இருந்தது, ஆனால் மிகவும் விகாரமாக. பச்சை உடம்பு, பாறை போன்ற தோல், அங்கங்கே மயிரா கயிறா என்று அறிய முடியாத எதோ ஒன்று. உடலுக்கு பொருத்தமில்லாத சிறிய கண்கள், மூக்கை வேறு காணோம். இரண்டு துளைகள் மட்டும் இருந்தது. அதன் நடை வித்தியாசமாய் தெரிந்தது. உடம்பை கஷ்டப் பட்டு நகர்த்துவது போல் இருந்தது. கைகளும் விரல்களும் அமைப்பில் என்னுடையது போல் இருந்தாலும், மிகவும் பெரியதாய், உலோகம் போல் இருந்தது. "நண்பரே, உங்கள் படுக்கையில் படுங்கள்".  உருவத்தை போலவே குரலும் விகாரமாய் இருந்தது. சதிகார சண்டாளர்கள், என்னை கடத்தி வந்ததில்லாமல் நண்பரே என்று சொல்லியே என்னைக் கொல்கிறார்கள். திடீரென்று என் செல்லப்பிராணி பியா நினைவுக்கு வந்து போனாள். ஒரு வேலை அவளும் என்னை இப்படித்தான் நினைத்திருக்கலாம். நான் அமைதியாய் படுக்கையில் சாய்ந்தேன். அதன் சொர சொர கைகளால் என் வாயை திறந்தது. அதன் முகத்தை என் அருகில் கொண்டு வந்தது. ஐயோ! அதன் வாயை என் வாயில் வைத்து விடுமோ! நினைக்கும் போதே குமட்டியது. நல்ல வேலை, பைப் போல் எதையோ என் வாயில் வைத்தது. ஒரு சிறிய பொத்தானை அழுத்தியதும், என் தொண்டைக்குழிக்குள் எதோ நகர்ந்து சென்றது. "முடிந்தது, நான் கிளம்புகிறேன். ஓய்வு எடுங்கள் நண்பரே! வருகிறேன்". விருந்தோம்பல் வேறு. எரிச்சலாய் வந்தது. பலமாய் கத்திக் கொண்டே அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் அது கூட முடியவில்லை. என்னத்தை கொடுத்துத்  தொலைத்தானோ, தூக்கம் கண்ணை சொருகிக் கொண்டு வந்தது. அப்படியே.........


                                                                                                                  பாகம் நான்கு

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

V2 ( Part 2 / பாகம் இரண்டு )

தலை முழுதும் பாரமாய் இருந்தது. உடல் எங்கும் சோர்வு. என்னை சுற்றி எதோ 'விஷ்ஷ் ' என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போல் இருந்தது. இது வரை கேட்டிடாட ஒரு சத்தம். அனால், நான் இப்போது கண்டஹவில் அல்லவா இருக்க வேண்டும். பியா!! எங்கே போனாள்? நான் ஒரு வேளை மயங்கி இருக்க வேண்டும். அவள் என் பக்கத்தில் தானாகவே வந்திருப்பாள். கண்கள் திறந்து பார்க்க எத்தனிக்கிறேன். முடியவில்லை. வேறு வழி இல்லை. நான் கண்களை திறந்துதான் ஆக வேண்டும். பியாவை கூட்டிக் கொண்டு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டும். ரே யோடு சவால் வேறு விட வேண்டும். நேரம் இல்லை, சீக்கிரம் விழிக்க வேண்டும். ஒரு வேலை ரொம்ப நேரம் ஆகி இருந்தால் வீட்டில் வேறு பதட்டம் ஆகி இருப்பார்கள். என்னால் முடியும். 'கண்களே, உதவி செய்யுங்கள்'. உள்ளுக்குள் கெஞ்சினேன்.கொஞ்சமாய் கண்கள் திறந்தன, ஆனால் பார்வைக்கு எதுவும் சரியாய் புலப் படவில்லை. வெளிச்சம் மிகவும் குறைவாய் இருந்தது. ஐயோ!! இரவாகி விட்டதா? கண்களை அகலத் திறந்தேன். சுற்றிலும் மெல்லிய வெளிச்சம். கண்களுக்கு மேலே வானம் அல்லவா தெரிய வேண்டும். எட்டும் தூரத்தில் வானம் இருக்க வாய்ப்பில்லையே. இது காடில்லை. ஏதோ மெத்தை மேல் இருக்கிறேன். இது ஒரு வீடாய் இருக்க வேண்டும். யாரேனும் என்னைக் கண்டெடுத்து இங்கே அழைத்து வந்திருக்க வேண்டும். பியா வும் இங்கு தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும்.


உடலை அசைப்பது கடினமாய் இருந்தது. இத்தனை சோர்வு எப்பொழுதும் இருந்தது கிடையாது. தலையை தூக்கிப் பார்த்தேன். ஏதோ வீட்டின் அறை போல் இருந்தது. ஆனால் மிகவும் எளிமையாய் இருந்தது. அறைக்குள் வேறு எதுவும்  பெரிதாய் இல்லை. கால்களை அசைக்க முடிந்தது. எழுந்து நிற்க முயன்றேன். உடலின் மொத்த சக்தியையும் ஒன்று சேர்த்தேன். எழுந்து நின்றேன். இவை என்னுடைய கால்களா? கொஞ்சம் மெலிவாய் தெரிந்தன. அட, என் கைகள், உடல் எல்லாம் காலையை விட மெலிவாய் தெரிகின்றது. ஒரு நாளில் இதெப்படி சாத்தியம்? குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் என்னில் படரத் தொடங்கியது. எதுவும் யோசிக்க முடியவில்லை. அந்த நேரம் அறைக்குள் ஒரு இனிய குரல். "வணக்கம் நண்பரே. நன்றாக இருக்கிறீர்களா?". குரல் வந்த திசையில் யாரும் இல்லை. அது ஒலிப்பெருக்கி. நான் எழுந்தவுடன் எப்படி என்னுடன் பேசுகிறார்கள். இங்கே கேமராக்கள் இருக்க வேண்டும். ஆனால் என்னை எதற்கு கண்காணிக்க வேண்டும்! பதற்றத்தை மறைத்துக் கொண்டு "என்னை காட்டில் இருந்து அழைத்து வந்ததற்கு நன்றி. என்னுடைய பியா இங்கு இருக்கிறாளா? என்னுடைய வீட்டில் என்னை தேடிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் உதவ முடியுமா?". இதை கேட்டதும் அந்தக் குரல் சிரிக்க தொடங்கியது. ஏனோ, இப்போது எனக்கு அது இனிமையாய் இல்லை.


என் முக மாற்றத்தை கவனித்திருக்க வேண்டும். "மண்ணியுங்கள் நண்பரே. உங்கள் பியா பத்திரமாக இருக்கிறாள். ஆனால், உங்கள் வீட்டிற்கு நீங்கள் தொடர்பு கொள்ள எங்களால் இப்போது உதவி செய்ய முடியாது என்று நினைக்கிறேன் ". எனக்கு கோபம் அதிகமானது. எங்கிருந்தோ பேசும் அவள் கையில் கிடைத்தால் அவளை அறைந்து விடுவேன். 'உங்கள் உதவி இதற்கு மேல் எனக்கு தேவை இல்லை. என்னை காப்பாற்றியதற்கு நன்றி. நான் கிளம்புகிறேன். எங்கே எனது பியா?'  என்று கோபத்தில் கத்திய பிறகு தான் கவனித்தேன். இந்த அறையில் கதவுகளே காணவில்லை! எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை யாரோ காப்பாற்றியது போல் இல்லை! அடைத்து வைத்திருப்பது போல் தோன்றியது. குழப்பமும் கோபமும் சேர்ந்து எரிச்சல் அடைந்தேன். 'நான் வெளியே போக வேண்டும். எனக்கு நேரமாகிறது. எவ்வளவு நேரம் இங்கே நான் இருக்கிறேன்!' என்றேன் ஆத்திரமாய். அந்த குரல் எந்த பதட்டமும் இன்றி "நண்பரே, உண்மையில் நேரம் இல்லை, நீங்கள் இங்கு வந்து நாட்கள் ஆகிறது." என்றது. எனக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது. சில நாட்களாய் இருக்கிறேனா!! அதனால் தான் உடல் இளைதிருக்கிறதா!! அனிச்சையாய், 'எத்தனை நாட்கள்?' என்றேன். அந்தக் குரல் "என் பதிலை கேட்டு நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். உங்கள் கிரஹ கணக்கின் படி நீங்கள் இங்கு வந்து 157 நாட்கள் ஆகின்றது. '157 நாட்களா!!!' எனக்கு உயிர் நின்று விடும் போல் இருந்தது. அதென்ன 'உங்கள் கிரஹ கணக்கு' என்று அவள் சொன்னாள்!! அப்படி என்றால் அவள் யார்? நான் எங்கே இருக்கிறேன்? '. ஒரே நேரத்தில் ஆயிரம் கேள்விகள் என்னை வருத்தி எடுத்தன. நான் அனைத்தையும் நம்ப மறுத்தேன். "உங்கள் கிரஹ கணக்கு" அவள் சொன்னது மட்டுமே எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தது. அவள் வேற்று கிரஹ வாசியா!!! கண்கள் சுழன்றன. மீண்டும் மயான அமைதி.......

                                                                                                             பாகம் மூன்று

காலமானி கனவுகள்..

பம்பாய் என்ற பெருநகர பிரமாண்டத்துக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதற்க்கு சற்றும் குறைவில்லாத வேறொரு பிரம்மாண்டமாய் நீண்டு கிடந்த ...